Pandian stores: கடமைகளை நிறைவேற்றும் தனம்.. விரைவில் நிறைவடைகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ்?
சென்னை: விஜய் டிவியின் டாப் சீரியல்களில் இரண்டாவது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
தமிழில் உருவாகியுள்ள தொடர் என்ற பெருமையுடன் அண்ணன்-தம்பி பாசத்தையும் மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
அடுத்தடுத்த பிரச்சினைகளை சந்தித்தாலும் தங்களின் ஒற்றுமையை மட்டும் விட்டுக் கொடுக்காத 4 சகோதரர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் என இந்தத் தொடர் மாஸ் காட்டி வருகிறது.
வருத்தத்தையும் மகிழ்ச்சியையும் ஒருசேர கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்: விஜய் டிவியின் டாப் சீரியல்களில் இரண்டாவது இடத்தை கடந்த சில வாரங்களாகவே பிடித்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரில் 4 சகோதரர்களின் ஒற்றுமையை சிறப்பான எபிசோட்களாக கொடுத்து வருகிறார் இயக்குநர். தமிழில் உருவாகியுள்ள தொடர் என்ற சிறப்பையும் இந்தத் தொடர் பிடித்துள்ள நிலையில், சகோதரர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகள் அவற்றை தீர்க்க அவர்கள் ஒன்றாக செயல்படும் போக்கு ஆகியவையும் சிறப்பாக காணப்படுகிறது.

ஒற்றுமையாக ஒரே வீட்டில் இவர்கள் அனைவரும் வாழ்ந்து வந்த நிலையில், மீனாவின் அப்பா கொடுத்த பிரச்சினையால் தங்களது சொந்த வீட்டை விட்டு இவர்கள் வெளியேறுகிறார்கள். அப்பொழுதும் கதிர் வீட்டில் அனைவரும் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒரு பிரச்சினையில் இவர்கள் 3ஆக பிரியும் சூழல் ஏற்படுகிறது. இதையடுத்து, அகலக்கால் வைக்கும் கண்ணன், வங்கி ஆட்களால் தாக்கப்பட, அவர்களை பதிலுக்கு தாக்கி ஜெயிலுக்கு செல்கிறார் கதிர்.
மிகுந்த போராட்டத்திற்கிடையில் அவரை மீட்டு வீட்டிற்கு கூட்டி வருகிறார் அண்ணன் மூர்த்தி. தொடர்ந்து இந்தப் பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்த கண்ணனை வீட்டிற்கு அழைத்து வருகிறார் கதிர். இந்நிலையில், கர்ப்பமாக இருந்த அவரது மனைவி முல்லையை கீழே தள்ளி அவரது பிரசவத்தில் சிக்கலை அவரது எதிரி ஒருவர் ஏற்படுத்துகிறார். மிகுந்த போரட்டங்கள், பிரார்த்தனைகளுக்கு இடையில் அவரையும் மீட்டு குடும்பத்தினர் வீடு சேர்க்கின்றனர். அவருக்கு குழந்தையும் பிறக்கிறது.
இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் மூத்த அண்ணி தனத்திற்கு மார்பக புற்றுநோய், இரண்டாவது ஸ்டேஜில் இருப்பது கண்டறியப்படுகிறது. இதனால் அவர் செய்வதறியாமல் தவிக்கிறார். இந்த விஷயம், ஜீவாவின் மனைவி மீனாவிற்கு தெரியவருகிறது. ஆனால் தன்னால் உடனடியாக இதற்காக ட்ரீட்மெண்ட்டை செய்துக் கொள்ள முடியாது என்றும் ஒருவாரம் தனக்கு டைம் வேண்டும் என்றும் கூறும் தனம், அதுவரை இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மீனாவிடமும் சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.
தொடர்ந்து அவரது கடமைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வகையில் கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யாவிற்கு வளைகாப்பு செய்து வைக்கிறார். இந்த வளைகாப்பின்போது குடும்பத்தினர் அனைவரும் இணைந்து எடுத்துக் கொண்டுள்ள புகைப்படத்தை தற்போது சமூகவலைதளத்திலும் வெளியிட்டுள்ளனர். இதனால் விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவடையவுள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனாலும் சிறப்பான டிஆர்பியுடன் சேனலின் இரண்டாவது தொடராக இருந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இதனால் இந்தத் தொடரை அவ்வளவு எளிதில் நிறைவு செய்ய மாட்டார்கள் என்றே தெரிகிறது. இதனிடையே ஐஸ்வர்யாவின் சித்தியிடம் தான் பட்ட கடனை அடைப்பதற்காக, தன்னுடைய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கத் துவங்கியுள்ளார் கண்ணன். அவர் என்ன மாதிரியான பிரச்சினைகளை கொண்டு வரப்போகிறார் என்பதும் ரசிகர்களின் கேள்வியாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











