மனைவி சங்கீதா கேட்ட விவாகரத்து.. மலை போல் எழுந்திருக்கும் பிரச்னை.. நாளை முடிவு கட்டப்போகும் விஜய்?
சென்னை: விஜய்யிடமிருந்து அவரது மனைவி சங்கீதா கேட்டிருக்கும் விவாகரத்து விஷயம்தான் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது. இப்படி ஒன்று நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. விஜய்யின் ரசிகர்கள் செய்வதறியாது பதற்றத்தில் சங்கீதாவையே வன்மத்தோடும், அசிங்கமாகவும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் விஜய்யோ அதை கண்டித்தோ; அப்படி யாரும் பேச வேண்டாம் என்றோ ஒரு ட்வீட்கூட செய்யாதது பலரிடம் அதிருப்தியை உண்டு செய்திருக்கிறது.
விஜய்யின் திருமண வாழ்க்கை கோலிவுட்டில் உதாரணமாக இருந்தவைகளில் ஒன்று. அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா எப்படி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்களோ அதே நிலைமையில்தான் விஜய்யும், சங்கீதாவும் இருந்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் ஆப்பு வைக்கும்படி சங்கீதா பெரிய வெடிகுண்டை தூக்கி போட்டார். சில நாட்களுக்கு முன்பு அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை விஜய் மீதும், ஒரு நடிகை மீதும் அடுக்கியிருந்தார்.

அதிர்ச்சி கொடுத்த குற்றச்சாட்டுக்கள்: விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக அவர் சொன்னதை அடுத்து பலரும் யார் அந்த நடிகை என்று தேட ஆரம்பித்துவிட்டார்கள். சிலரோ ஒரு நடிகையை குறிப்பிட்டு அவர்தான் சங்கீதா குறிப்பிடும் நடிகை என அடித்து சொல்கிறார்கள். மேலும் தங்கள் அண்ணா மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கலாமா என்றெல்லாம் புலம்பிவருகிறார்கள். முக்கியமாக பெண்களிடம் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு இதனால் குறைந்துவிடுமோ என்ற அச்சமும் அவர்களிடமும் எழுந்திருக்கிறது.
அச்சத்தின் வெளிப்பாடு: அந்த அச்சத்தால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக சங்கீதாவையே தரக்குறைவாக பேசுகிறார்கள் ரசிகர்கள். இது அனைவருக்குமே பெரிய அதிர்ச்சிதான். இத்தனை வருடங்கள் அண்ணி, அண்ணி என்று கொண்டாடப்பட்ட ஒருவர் எப்படி இவர்களுக்கு ஒரே நாளில் ஆகாதவர் ஆகிறாரோ என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. அதேபோல் இதற்கு பின்னணியில் திமுகதான் இருக்கிறது என்பது தவெகவினரின் உறுதியான நிலைப்பாடு. ஆனால் பணம் வாங்கிக்கொண்டு இப்படி செய்யும் அளவுக்கு சங்கீதா ஒன்றும் பொருளாதாரத்தில் குறைந்தவர் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்களோ என்றுதான் கேட்க தோன்றுகிறது.
அமைதியான விஜய்: சங்கீதாவை இப்படி தளபதி ரசிகர்களே தரக்குறைவாக பேசுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இவை அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் விஜய்யோ அமைதியான நிலைக்கு சென்றுவிட்டார். ஆனால் மாணவர்களுக்கு வாழ்த்து, நாங்குநேரி கொலைக்கு கண்டனம் என பொது விஷயங்கள் தொடர்பாக ட்வீட்டுகளை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார். இருப்பினும் இவ்விவகாரத்துக்கு அவர் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் அனைவரது ஆவலாக இருக்கிறது.
நாளை முடிவு கட்டும் விஜய்?: இந்நிலையில் நாளை தஞ்சாவூரில் நடக்கும் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார் விஜய். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த கூட்டம் சங்கீதா பிரச்னை காரணமாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இக்கூட்டத்தில் சங்கீதா விஷயம் தொடர்பாக மௌனம் கலைப்பாரா இல்லை பொது பிரச்னைகளை மட்டும் பேசுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் நாளைக்கும் அவர் அமைதியாக இதை கடந்து சென்றுவிடக்கூடாது. இது தொடர்பாக குட்டி ஸ்டோரியாவது சொல்லி தொடர்ந்து சோஷியல் மீடியாவில் விவாதிக்கப்படும் இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டேமேஜ் ஆன தனது இமேஜை நாளைய கூட்டத்தில் எப்படி மீட்டெடுக்கப்போகிறார் என்பதை பார்க்கவும் தமிழ்நாடு ஆர்வமாக இருக்கிறது. பார்ப்போம் விஜய் என்ன செய்கிறார் என்பதை..


Click it and Unblock the Notifications















