Vijayakanth - தப்பா சொல்லாதீங்க.. அப்பா இறக்கும் முன் இதுதான் நடந்தது.. விஜயகாந்த் மகன் உருக்கம்
சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. லட்சக்கணக்கானோர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த சூழலில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு நேற்று நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது.
புரட்சி கலைஞர், கேப்டன் என்று மக்களால் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். 150 படங்கள்வரை நடித்திருக்கும் அவர் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த மாதம் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் தேமுதிக தலைமை கழக அலுவலகத்தின் வளாகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று அவருக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கமல் ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டனர்.

விஜய பிரபாகரன் பேச்சு: அந்த கூட்டத்தில் பேசிய விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், "சிறு வயதிலிருந்து நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்ததைவிட என் அப்பாவைத்தான் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அப்பா என்றாலே நான் ரொம்பவே எமோஷனல் ஆகிடுவேன். கேப்டன் நம்மை விட்டு எங்கும் செல்லவில்லை. நம்முடனேதான் இருக்கிறார். அவர் இறந்தது முதல் இதுவரை எந்த மீடியாவிலும் நான் பேசவில்லை. இப்போதுதான் முதன்முறையாக பேசுகிறேன்.
கலந்துகொண்டதில்லை: அதேபோல் நடிகர் சங்கம் நடத்திய எந்த நிகழ்விலும் நானோ எனது சகோதரர் சண்முகபாண்டியனோ கலந்துகொண்டதில்லை. இதுதான் முதல் நிகழ்வு. முதல் நிகழ்ச்சியே இப்படி ஒரு நிகழ்வாக மாறிப்போது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. அதேபோல் அப்பா இல்லாமல் பேசும் முதல் நிகழ்ச்சியும் இதுதான். அதை எப்படி சொல்ல வேண்டும் என எனக்கு தெரியவில்லை. எனது அப்பா விஜயகாந்த் சிறு வயதில் இருந்தே கொடுத்து கொடுத்துதான் பழகியிருக்கிறார்.
என்ன நடக்கப்போகுதோ: நிறைய பேர், இன்று கேப்டன் இல்லை. என்ன நடக்கப்போகிறதோ என நினைக்கிறார்கள். ஆனால் எங்கள் அப்பா எங்களை உங்களுக்காகத்தான் விட்டு சென்றிருக்கிறார். அவரது கனவை நிறைவேற்றத்தான் அவரது மகன்களான விஜய பிரபாகரனும், சண்முக பாண்டியனும் இருக்கிறோம் என்பதை கூறிக்கொள்கிறேன்.
ரொம்பவே பெருமை: ரொம்பவே பெருமையாக இதனை நான் சொல்வேன். ஏனெனில் ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் எல்லோரும் ஏதேனும் ஒரு உறுதி மொழியை வீட்டில் எடுப்போம். 2023ல் எனது பிறந்தநாளை முன்னிட்டும், அம்மாவுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கும்போதும் சரி அப்பாவிடம் நான் சில வாக்குறுதிகளை கொடுத்தேன். அதை 2024 ஆம் ஆண்டு நிறைவேற்றுவேன். அது என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது. காலம் அதற்கான பதிலை சொல்லும்.
சிங்கம்தான்: கடந்த பத்து வருடங்களாகவே விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டார். வேறு யாராக இருந்தாலும் இப்படி தாங்கியிருப்பார்களா என்று தெரியவில்லை. நான் ஒவ்வொரு மீட்டிங்கிலுமே சொன்னேன், குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான் என்று. 71 வயது வரை விஜயகாந்த் கஷ்டப்பட்டாலும் நின்றார் என்றால் அது அவரது மன தைரியம் மட்டும்தான்.
தப்பா சொல்லாதீங்க: விஜயகாந்த்துக்கு நினைவு இல்லை என்று நிறைய யூட்யூப் சேனல்களில் தப்பு தப்பா சொல்றீங்க. அது எல்லாமே பொய். அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர்வரைகூட எங்கள் வீட்டில் வேலை செய்த இரண்டு பேரிடம் அவர் நடித்த எல்லா படத்தின் பாடல்களையும் போட சொல்லி கேட்டு ரசித்துக்கொண்டிருந்தார். அது எனக்கே தெரியாது. அந்த 2 அண்ணன்கள் சொல்லித்தான் தெரியும். உடனே சிசிடிவி கேமராவை பார்க்கும்போது அப்பா அந்தப் பாடல்களை கேட்டு ரசித்து தாளம் போட்டுக்கொண்டிருந்தது தெரிந்தது.
வந்திடுவார் என்று நினைத்தோம்: டிசம்பர் 26ஆம் தேதி அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். எப்படியும் வந்துவிடுவார் என்று நினைத்தோம். ஆனால் வரவில்லை. கேப்டன் மாதிரிதான், 'இந்த விஜயகாந்த் மக்களுக்காகத்தான் வாழ்ந்தான், வாழ்வான், வாழ்ந்துகொண்டே இருப்பான்' என்பதை சொல்லிக்கொள்கிறேன். இந்த நிகழ்வை நடத்திய தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











