விஜயகாந்த் நினைவு தினம்.. உருகி வேண்டுகோள் வைத்த எம்.எஸ்.பாஸ்கர்.. ரொம்ப ஃபீல் செய்றாரு
சென்னை: நடிகரும், தேமுதிக கட்சியை தொடங்கியவருமான விஜயகாந்த் உடல்நல குறைவால் கடந்த 2023ஆம் ஆண்டு இதே நாள் சென்னையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் உயிரோடு இருந்தபோது அவரை விமர்சித்தவர்கள்கூட; விஜயகாந்த் இறந்த பிறகு அவரை நினைத்து கண்ணீர் விட்டார்கள். இந்நிலையில் அவரது இரண்டாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து பல கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்து நடிகரானவர் விஜயகாந்த். ஹீரோவாக அவர் மாறியபோது ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் உச்சத்தில் இருந்தார்கள். இருந்தாலும் நம்பிக்கையை விடாத அவர் தனக்கென தனி பாடி லாங்குவேஜ், நடிப்பு, ஸ்டைல் என அத்தனையையும் உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தார். ஒருகட்டத்தில் கிராமப்புறங்களில் ரஜினி, கமலைவிடவும் அதிக ரசிகர்கள் கொண்டவராக மாறினார் கேப்டன்.
அரசியலில் விஜயகாந்த்: 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்த அவர்; பல வருடங்கள் மக்களுக்கு தன்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்துகொண்டே இருந்தார். தீவிர திமுக அபிமானியாக இருந்த அவர்; அந்தக் கட்சியின் தலைமையோடு ஏற்பட்ட மன கசப்பால் தேமுதிக என்ற கட்சியை தொடங்கி; 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபித்தார்.

கவிழ்த்த சகாக்கள்: அவருக்கு இருக்கும் வாக்கு வங்கியை பார்த்த ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு தன்னுடன் கூட்டணி வைக்கும்படி பார்த்துக்கொண்டார். அதிமுகவுடன் கூட்டணி வைத்து வென்று தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராக மாறி; சட்டப்பேரவையில் ஜெயலலிதாவையும் எதிர்த்தார். இதனால் ஜெ தனது அரசியல் சதுரங்கத்தை ஆடி; விஜயகாந்த்தை பலிகடா ஆக்கினார். தன்னுடன் இருந்தவர்களே தனக்கு துரோகம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தார் அவர்.
உயிரிழந்த கேப்டன்: அப்போதிருந்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்ந்து போன அவர்; அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இருந்தாலும் முழுமையாக சரியாகததால் கடந்த 2023ஆம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இன்று அவரது இரண்டாவது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்; விஜயகாந்த்தின் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
உருக்கமான வேண்டுகோள்: அதனையடுத்து வீடியோவில் பேசிய அவர், "இன்று எனது அண்ணன். எனக்கு உணவளித்த அம்மா விஜயகாந்த்தின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம். என்ன சொல்வதென்று தெரியவில்லை. இனிக்கும் இளமை, தர்மபுரி, நெறஞ்ச மனசு படங்களில் சேர்ந்து நடித்ததிலிருந்து அவர் என்னிடம் காட்டிய அன்பும், ஆதரவும், பாசமும் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது. அண்ணன் உடலால் மட்டும் பிரிந்திருக்கிறார். உள்ளத்தால், உணர்வால், உயிரால் பிரியவில்லை. வெளியூர் படப்பிடிப்பில் இருப்பதால் வரும் வழியில் அண்ணனின் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தினேன். மீண்டும் கேப்டனாகவே வாங்கள் அண்ணா" என்றார்.


Click it and Unblock the Notifications











