Vijayakanth: “நல்லா தூக்கி அடிக்கிறியேன்னு சொன்னார்" விஜயகாந்த் நினைவிடத்தில் கண் கலங்கிய ஜெயம் ரவி
சென்னை: கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு ஜெயம் ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இதனையடுத்து விஜயகாந்த் நினைவிடம் சென்ற ஜெயம் ரவி, கண் கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார். கார்த்தி, சூர்யாவை தொடர்ந்து ஜெயம் ரவியும் அஞ்சலி செலுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
கேப்டன் நினைவிடத்தில் கண் கலங்கிய ஜெயம் ரவி: சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த கேப்டன் விஜயகாந்த், கடந்த வாரம் 28ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக விஜயகாந்தின் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், கவுண்டமணி, இளையராஜா, பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதேநேரம் அஜித், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்கள் யாரும் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தவில்லை. தங்களது சமூக வலைத்தளங்களில் மட்டுமே இரங்கல் தெரிவித்திருந்தனர். இதில் சிலர் படப்பிடிப்பில் இருப்பதால் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. இதனால் ரசிகர்களே தங்களது ஹீரோக்களை விமர்சனம் செய்திருந்தனர்.
விஜயகாந்த் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்குக் கூட இவர்களால் அஞ்சலி செலுத்த போக முடியவில்லையா என கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் புத்தாண்டு முடிந்ததும் கார்த்தி, சூர்யா, சிவகுமார் ஆகியோர் விஜயகாந்த் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். கறுப்பு சட்டை அணிந்தபடி கேப்டன் நினைவிடம் சென்ற ஜெயம் ரவி, சில நிமிடங்கள் கண் கலங்கி நின்றார்.

பின்னர் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "விஜயகாந்த் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைத்த மனிதர் அவர். நிறைய நல்ல விஷயங்கள் பண்ணிருக்கார்... நடிகர் சங்கம் மட்டும் இல்லாம யாராக இருந்தாலும் அவங்களுக்கு நல்லதும் உதவிகளும் பண்ணிருக்கார்... அவர் இப்போ நம்மளோட இல்லைங்குறத ஏத்துக்க முடியல. விஜயகாந்த் செஞ்ச எல்லா நல்லதையும் அவரு குடும்பத்துல இருக்குறவங்களும் சங்கத்துல இருக்குறவங்களும் தொடர்ந்து பண்ணிட்டு இருக்காங்க."
"எங்க அப்பாவும் விஜயகாந்த் சாரும் நெருங்கிய நண்பர்கள்... எனது அப்பா அடிக்கடி விஜயகாந்த் சார் மாதிரி வரணும்னு சொல்லிட்டே இருப்பார். நான் நடிக்க வந்தப்போ என்ன கூப்பிட்டு அவ்ளோ என்கரேஜ் பண்ணிருக்கார். அப்போலாம் என்னோட அப்பா பத்தி அதிகம் பேசிருக்கார். என்னோட ஃபைட் சீன்ஸ் பத்திலாம் அதிகம் பாராட்டியிருக்கார். நல்லா கால்ல தூக்கி அடிச்சு ஃபைட் பண்றதையும் சொல்லி பாராட்டினார். என் மீது அக்கறை எடுத்து பல அட்வைஸ் பண்ணிருக்கார். இறுதியாக நடிகர் சங்கத்துக்கு கேப்டன் பெயர் வைப்பதில் தனக்கு சந்தோஷம் தான்" என பேசி சென்றார்.


Click it and Unblock the Notifications











