சிவாஜி குடும்பம் விஜயகாந்திற்க்கு கடமைப்பட்டுள்ளது... பிரபு நெகிழ்ச்சி
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார் பிரபு.
பிரபு மட்டுமின்றி அவருடைய மகன் விக்ரம் பிரபுவும் அதில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் பற்றி பிரபு ஒரு நிகழ்வில் பேசியிருப்பது தற்சமயம் வைரலாகியுள்ளது.

மணிரத்னம் பிரபு
தற்சமயம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூதி விக்ரமகேசரி என்கிற சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிரபு. அக்னி நட்சத்திரம், அஞ்சலி, ராவணன் திரைப்படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொன் நிற குதிரை
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்களிலேயே குதிரை சவாரியில் அதிக அனுபவம் உடையவர் நடிகர் பிரபுதானாம். அதனால் அவருக்கு வரவழைக்கப்பட்ட குதிரை பொன் நிறத்தில் கம்பீரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். படத்தில் நடித்த மற்ற நடிகர்களே அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குதிரையை பிரம்மிப்புடன் பார்த்ததாக பேட்டியில் கூறியிருக்கின்றனர் .அதுமட்டுமின்றி இந்தப் படத்திற்காக பிரபு உடல் எடையை குறைத்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்தின் செயல்
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறந்ததை கேள்விப்பட்டு முதலில் அவரது இல்லத்திற்கு சென்றவர் நடிகர் விஜயகாந்த்தானாம். சிவாஜியின் மகன்களான பிரபு மற்றும் ராம்குமார் செய்வதறியாது கலங்கி நின்றபோது, நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் அவருடைய இறுதி சடங்கு தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக மட்டும் அமைந்து விடக் கூடாது என்றும் அனைவரும் சேர்ந்து வழி அனுப்ப வேண்டும் என்றும் அப்போது நடந்த சடங்குகள் அனைத்தையும் தனி ஆளாக ஏற்பாடு செய்திருந்தாராம். இன்றும் கூட திரைப் பிரபலங்கள் அதனை பற்றி பெருமையாக கூறுவார்கள்.

பிரபு நன்றிக்கடன்
அதன் பிறகு விஜயகாந்த் தொடர்பாக சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்பொழுது, நான் என்னுடைய அப்பா சிவாஜி கணேசன் அவர்கள் தயவால் சிரமம் இல்லாமல் நடிகனாகி விட்டேன். ஆனால் விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் சிரமப்பட்டுத்தான் நடிகர்களாக வந்தார்கள். அவர் தேர்வு செய்த படங்கள் எனக்கு, சத்யராஜ் போன்ற சம காலத்து நடிகர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. அது மட்டுமின்றி பல தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தியதும் அவர்தான். அவர் குடும்ப நிகழ்ச்சிக்கு யார் அழைத்தாலும் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கலந்து கொள்வோம் என்று பிரபு நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். இருவரும் இணைந்து காலையும் நீயே மாலையும் நீயே, நம்பினார் கெடுவதில்லை போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருப்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











