Don't Miss!
- News ரூ.1 கூட செலவில்லாமல் 5 லட்சம் ரூபாய்.. ரேஷன் கார்டு இருக்கா? அப்ப கன்பார்ம்டு.. மத்திய அரசு சூப்பர்
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Finance அம்பானின்னா சும்மாவா.. 50, 80 வருடத்தில் செய்ய வேண்டியதை ஓரே வருடத்தில் சாதித்துவிட்டார்..!
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
Vijayakanth: வெள்ளைச்சிரிப்பு..வெள்ளந்தியான மனிதர்..எம்ஜிஆருக்கும்- விஜயகாந்துக்கும் உள்ள ஒற்றுமை
சென்னை: தமிழ் திரையுலகில் சினிமா மூலம் ரசிகர் பட்டாளத்தை திரட்டி வென்றவர் விஜயகாந்த். ஆளுமை மிக்க மனிதர்.
ரேஷன் பொருட்கள் வீடுதேடி வரும் என அறிவித்தவர், அது சிறந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.
திரையுலகில் விஜயகாந்தின் வளர்ச்சி பலரை உருவாக்க காரணமாக அமைந்தது. இன்று உடல் நலக்குறைவால் முடங்கியுள்ள அவர் நலம் பெற ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
மீண்டும் அதிரடி கிளப்ப தயாராகும் கேஎஸ் ரவிக்குமார்.. இப்ப யாரை இயக்கப் போறாரு தெரியுமா?
80 களில் ரஜினி கமலுடன் போட்டியிட்ட விஜயகாந்த்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி ஆளுமைக்கு அடுத்து ரஜினி, கமல் 80-களில் முன்னனியில் இருந்த காலத்தில் திடீரென நுழைந்தார் அந்த இளைஞர். கருத்த மேனி, கட்டுடல் தேகத்துடன் கலையான முகத்துடன் இருந்த அந்த இளைஞர், அவருடைய வெள்ளை சிரிப்பின் மூலம் தமிழக ரசிகர்களை கவர்ந்தார். அவர்தான் விஜயகாந்த்.
எம்ஜிஆருக்கு பின் இவர்தான்
மதுரையில் ஒரு கிராமத்திலிருந்து வந்த அந்த இளைஞர் பின்நாளில் தமிழக இளைஞர்களின் ஆதர்ச நாயகன் ஆனார். ரஜினி, கமல் புகழ் உச்சியில் இருந்த காலகட்டத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் விஜயகாந்த்.தமிழ் திரையுலகில் கருப்பு எம்ஜிஆர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். இப்போது தனிப்பட்ட முறையில் தனது செல்வாக்கை மட்டுமே வைத்து அரசியல் கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராகவும் ஆனது வரலாறு. எம்ஜிஆருக்கு பின் இதை நிரூபித்தது விஜயகாந்த் மட்டுமே.
ஆளுமைமிக்க நடிகர் சங்க நிர்வாகி
கருப்பு எம்ஜிஆர் என்று அழைக்கப் பட்டது போலவே புரட்சித்தலைவர் புரட்சி நடிகர் என்று எம்ஜிஆருக்கு பெயர் இருந்தது போல புரட்சி கலைஞர் என்ற பெயர் விஜயகாந்துக்கு ரசிகர்களால் அளிக்கப்பட்டது. நடிகர்களில் ஆளுமை திறன் மிக்கவர் என்று பெயரெடுத்தவர். அதற்கு உதாரணம் நடிகர் சங்க தலைமை பொறுப்பேற்று அதன் கடனை அடைத்தவர். ஜெயலலிதா, கருணாநிதியிடம் நடிகர் சங்க பிரச்சினையை கொண்டுச் செல்வதில் வெற்றிபெற்றவர்.
எம்ஜிஆர் போல் அணையா அடுப்பு விஜயகாந்தின் அலுவலக அடுப்பு
விஜயகாந்த் ஆரம்ப காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டு சினிமா துறையில் முன்னேறினார். விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தருடன் இணைந்து பல நல்ல படங்களை கொடுத்தார். அவரது திரைவாழ்க்கையில் இப்ரஹிம் ராவுத்தர் பங்கு மிகப் பெரியது. நட்புக்கு இலக்கணம் என்று இருவரையும் அப்போது திரை உலகம் அழைத்தது. நடிகர் விஜயகாந்த் வசதியான வாழ்க்கை சூழலில் இருந்து திரையுலகிற்கு வந்தவர் என்றாலும் சாதாரண மக்களின் வறுமையை கஷ்டத்தை புரிந்து கொண்டவர்.
நலிவுற்ற கலைஞர்களின் பசி தீர்த்தவர்
திரைக்கலைஞர்கள், சினிமாவை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள் எவ்வளவு கஷ்டப் படுவார்கள், சோற்றுக்கு வழியில்லாத அளவுக்கு வருவார்கள் என்பதை நன்றாக அறிந்திருந்தார் விஜயகாந்த். அதனால் அவரது அலுவலகம் எப்பொழுதும் திரைக்கலைஞர்களுக்காக அன்னம் காக திறந்தேயிருந்தது. என்நேரமும் அவரது அலுவலகத்தில் நலிவுற்ற கலைஞர்களுக்கு, சினிமாவை நாடி வருபவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இளம் இயக்குநர்களை கைதூக்கி விட்டவர்
திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய விஜயகாந்த் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். ரஜினி, கமலுக்கு இணையாக விஜயகாந்தின் புகழும் இருந்தது. அதை அவர் சிறப்பாக தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நற்பணிக்கு பயன்படுத்தினார். அந்த மன்றங்களே பின் நாளில் விஜயகாந்த் அரசியலுக்கு வர பெரிய அளவில் பயன்பட்டது. பெரிய நடிகர் பல ஹிட் படங்களை கொடுத்தவர், புதிதாக திரையுலகிற்கு வரும் இளம் இயக்குநர்கள், கலைஞர்களை கைதூக்கி விட்டவர் விஜயகாந்த் தான்.
விஜய், சரத்குமார், மன்சூர் அலிகான்..
விஜயகாந்தால் திரையுலகில் கால் பதித்து வெற்றிபெற்ற பல கலைஞர்கள் உள்ளனர். பிலிம் இன்ஸ்டிடியூட் கலைஞர்களுக்காக ஊமை விழிகள் படத்தை நடித்து கொடுத்து அவர்கள் வாழ்வில் விளக்கேற்றினார். நடிகர் விஜய் நடிக்க ஆரம்பித்த காலத்தில் அவருடன் படம் நடித்து ஊக்கப்படுத்தினார். சரத்குமாருக்கு வில்லன் ரோல் கொடுத்து ரீ என்ட்ரீ கொடுத்து அவர் புகழ்பெற உதவினார்.மன்சூர் அலிகான் முதல் பலபேர் விஜயகாந்தால் வெளிச்சம் பெற்றனர்.
அரசியலிலும் கால் பதித்து வென்ற விஜயகாந்த்
விஜயகாந்த் சினிமா புகழை பயன்படுத்தி அரசியலில் கால் பதித்து வெற்றியும் பெற்றார். அவரது வளர்ச்சியை அலட்சியமாக பார்த்த அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் பின்னர் அவரது வாக்கு சதவீதத்தால் வெற்றியை பறிகொடுத்தபோது விஜயகாந்தை அங்கிகரித்தன. 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு விஜயகாந்து பெரிதும் காரணமாக இருந்தார். சினிமா போலவே அரசியலிலும் இளைஞர்கள் பலரை எம்.எல்.ஏ ஆக்கினார். எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார்.
தமிழகத்தின் எதிர்கட்சித்தலைவரான விஜயகாந்த்
2 வது பெரிய கட்சியாக இருந்த தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்ததால் பல சிக்கல்களை விஜய்காந்த் சந்தித்தார். அவர் எதிர்க்கட்சித்தலைவர் பதவியையும் இழக்க நேர்ந்தது. அதன் பின்னர் உடல் நலக்குறைவு விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையை முடக்கியது, அரசியலில் காற்றடிக்கும் நேரம் மாவு விற்று, மழைபெய்யும் நேரம் உப்பு விற்ற விஜயகாந்தின் நடவடிக்கை தேமுதிகவை பாதித்தது. ஆனாலும் ஆண்டுதோறும் தான் வழங்கும் நலத்திட்ட உதவிகளை விஜயகாந்த் நிறுத்தியதே இல்லை.
முடக்கிபோட்ட உடல் நலன் பாதிப்பு
உடல் நலன் பாதிப்பு திரையுலக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையில் விஜயகாந்தை முடக்கி போட்டது. நல்ல மனிதர், வெள்ளந்தியான மனிதர், பாசக்கார மனிதர், கோபம் இருக்கும் இடத்தில் குணமிருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு விஜயகாந்த் என்றெல்லாம் ரசிகர்கள், அவரை அறிந்தவர்கள் பேசுவதை கேட்டுள்ளோம். தற்போது உடல் நல பாதிப்பு காரணமாக காலில் சில விரல்கள் அகற்றப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளார்.
முதல்வர் முதல் ரஜினிவரை நலம் பெற வாழ்த்து
விஜயகாந்த் நலம் பெற்று மீண்டும் கர்ஜிக்க வேண்டும் என ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தியுள்ளனர். விஜயகாந்தின் ரசிகர்களின் வேண்டுதலும் அதுவாகத்தானிருக்கிறது. குறுகிய காலகட்டத்தில் திரையுலக வெற்றி, அரசியல் வெற்றி என பார்த்த விஜயகாந்தின் முடக்கம் அவரது தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் வேதனையான செய்திதான். விஜயகாந்த் அவரது உடல் நலன் தேறி மீண்டும் பயணத்தை தொடர அவரது தொண்டர்களைப்போலவே நாமும் விருப்பப்படுகிறோம்.