Vijayakanth: “விஜயகாந்துக்கு என் குடும்பமே நன்றி கடன் பட்டுருக்கு.. இதுதான் காரணம்..” பிரபு கண்ணீர்!
சென்னை: கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாசன், சரத்குமார், விஜய், இளையராஜா, கவுண்டமணி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து இளைய திலகம் பிரபுவும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். அதன்பின்னர் பேட்டிக்கொடுத்த பிரபு, விஜயகாந்துக்கு எனது குடும்பமே நன்றிக் கடன் பட்டுள்ளதாக உருக்கமாக பேசினார்.
விஜயகாந்த் குறித்து பிரபு உருக்கம்
கேப்டன் விஜயகாந்தின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த், அனைவரிடமும் இயல்பாக பழகும் தன்மை கொண்டவர். இதனால் அவருக்கு அனைத்து தரப்பில் இருந்தும் ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் விஜயகாந்தின் உடலுக்கு இளைய திலகம் பிரபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நேற்று விஜய், சரத்குமார், பார்த்திபன், மன்சூர் அலிகான், விஜய் சேதுபதி, கருணாஸ், இசைஞானி இளையராஜா, இயக்குநர்கள் மாரி செல்வராஜ், பா ரஞ்சித் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேபோல் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோரும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து இளைய திலகம் பிரபுவும் விஜயகாந்துக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் மிகவும் உருக்கமாக பேட்டிக் கொடுத்தார் பிரபு. அதில் விஜயகாந்துக்கு தனது குடும்பமே நன்றி கடன் பட்டுள்ளதாக மிக உருக்கமாக பேசினார். அதாவது, "எனது அப்பா சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் கடைசி வரை உறுதுணையாக நின்றவர் விஜயகாந்த் அண்ணன் தான். நான் செய்ய வேண்டிய கடமையை அன்றைக்கு விஜயகாந்த் அண்ணன் தான் செய்தார். அன்று கடைசிவரை நின்று சிவாஜியை நல்லடக்கம் செய்ததோடு, என் அம்மாவைப் பார்த்து எல்லாத்தையும் ஒப்படைத்து விட்டுத்தான் சென்றார்."
"அவரும் சிவாஜிக்கு ஒரு மகன்தான். அந்த நன்றிக்காக நாங்கள் குடும்பத்துடன் வந்து அவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அவரை நல்லடக்கம் செய்து அஞ்சலி செலுத்தப் போகிறோம்" என உருக்கமாக பேசியுள்ளார். அப்போது நடிகர் பிரபுவால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் விஜயகாந்த் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் நின்றதை பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது அதனை இளைய திலகம் பிரபுவும் கண்ணீர் மல்க மக்கள் முன்பு பேசியது பார்ப்பவர்களையும் கண்கலங்கச் செய்துள்ளது. ரஜினியும் தான் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த போது அங்கு கூடிய கூட்டத்தை விஜயகாந்த் தான் அப்புறப்படுத்தி எனக்கு பாதுகாப்பாக இருந்ததாக கூறியிருந்தார். விஜயகாந்தின் இந்த பெருந்தன்மையான செயல்கள் மக்கள் மனதில் அவர் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











