Vijayakanth: ரஜினிக்கு வில்லனாக நடிக்கவிருந்த விஜயகாந்த்... கடைசி நேரத்தில் விலகிய காரணம் இதுதானா?
சென்னை: விஜயகாந்த் மறைவை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, வேட்டையன் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். ரஜினிகாந்த் - விஜயகாந்த் என்பதால் இருவரையும் அண்ணன், தம்பி என ரசிகர்கள் நினைத்தது எல்லாம் ஒரு காலம். அதேநேரம் இருவரும் இதுவரை இணைந்து நடித்தது கிடையாது. ஆனால், முரட்டுக் காளை படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விஜயகாந்துக்கு தான் சென்றுள்ளது.
ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விஜயகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் என இருவரும் ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழ் சினிமாவில், தனக்கென தனியாக ஒரு சாம்ராஜ்யத்தை கட்டமைத்தவர் விஜயகாந்த். கடுமையான போராட்டங்களுக்குப் பின்னர் ரஜினி, கமல் வரிசையில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக கெத்து காட்டினார். தயாரிப்பாளர்களின் மினிமம் கியாரண்டி ஹீரோவாகவும், புதிய இயக்குநர்களின் முகவரியாகவும் வலம் வந்தவர் விஜயகாந்த்.

இதனால் ரஜினி - கமல் என்ற போட்டிக்கு நடுவே, ரஜினிகாந்த் - விஜயகாந்த் என இன்னொரு பந்தயமும் ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. அதேபோல், கமலுடன் இணைந்து நடித்த ரஜினி, விஜயகாந்துடன் நடிக்கவே இல்லை. பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கூட, விஜயகாந்துடன் இணைந்து நடிக்க முடியாமல் போனது பற்றி ரஜினி பேசியிருந்தார். அதாவது கமல் எடுக்கவிருந்த பொன்னியின் செல்வனில், விஜயகாந்த் ஆதித்த கரிகாலனாக நடித்தால் நன்றாக இருக்கும் என விரும்பியதாக பேசினார்.
பொன்னியின் செல்வன் ஆதித்த கரிகாலனாக விஜயகாந்த் நடித்திருக்கலாம் என ரஜினிகாந்த் பேசியபோது நேரு ஸ்டேடியமே அதிர்ந்தது. முன்னதாக முரட்டுக் காளை படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க முதலில் விஜயகாந்த் தான் கமிட்டாகியிருந்தாராம். சினிமாவில் அறிமுகமான புதிதில் அதிகம் வாய்ப்பில்லாமல் இருந்த விஜயகாந்துக்கு, முரட்டுக் காளை படத்தில் வில்லனாக நடிக்க ஏவிஎம் நிறுவனம் சான்ஸ் கொடுத்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் விஜயகாந்துக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளமும் கொடுத்துள்ளது ஏவிஎம் நிறுவனம். ஆனால் விஜயகாந்தின் உயிர் நண்பரான இப்ராஹிம் ராவுத்தரோ, அந்தப் படத்தில் கேப்டன் வில்லனாக நடிக்கவே கூடாது என விடாப்பிடியாக சொல்லிவிட்டாராம். "நீ ஹீரோவாகவே நடிக்க பிறந்தவன். எக்காரணம் கொண்டும் வில்லனாக நடிக்கக் கூடாது" என ராவுத்தர் சொல்லியதால், தான் வாங்கிய சம்பள பணத்துக்கான செக்கை திருப்பி கொடுத்துவிட்டாராம் விஜயகாந்த்.


Click it and Unblock the Notifications











