Vijayakanth Funeral - விஜயகாந்த்துக்கு இன்று இறுதிச்சடங்கு.. எங்கு? எப்போது?.. முழு விவரம் உள்ளே
சென்னை: விஜயகாந்த் நேற்று காலை உடல்நலக்குறைவால் மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சூழலில் அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறவிருக்கிறது. அவரது உடல் இப்போது சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கிறது. தொண்டர்களும், ரசிகர்களும் உச்சக்கட்ட சோகத்தில் இருக்கின்றனர்.
இனிக்கும் இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜயகாந்த் மொத்தம் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சாமானிய உருவம், மொழி, அழகு என அத்தனையிலும் அவர் எளிய மக்களை பிரதிபலித்ததால் ரசிகர்களிடம் அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. இதன் காரணமாக அவர் ரஜினி, கமலுக்கு போட்டியாக வளர்ந்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

அரசியலில் கேப்டன்: ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்ட அவர் கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் களமிறங்கி எதிர்க்கட்சி தலைவராக மாறினார். பிறகு சில விஷயங்களால் அரசியலில் சறுக்கலை சந்தித்தார். அதேபோல் அந்த சமயத்தில் அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார்.
உயிரிழப்பு: அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு முழுநேர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வில் இருந்தார். சூழல் இப்படி இருக்க அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது நுரையீரல் அழற்சி ஏற்பட்டதன் காரணமாக நேற்று முன் தினம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.10 மணிக்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பெரிய சோகம்: விஜயகாந்த்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உறைய வைத்திருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள ஊர்களில் விஜயகாந்த்தின் தொண்டர்களும், ரசிகர்களும் துக்கம் அனுசரித்துவருகின்றனர். திரையுலகில் இருந்தும் விஜய், இளையராஜா, சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இன்று இறுதிச்சடங்கு: இந்த சூழலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக சென்னை தீவுத்திடலில் தற்போது வைக்கப்பட்டிருக்கிறது. மதியம் 1 மணிவரை மக்கள் விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம். அதற்கு பிறகு அங்கிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கி தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு வந்தடைகிறது.
அங்கு மாலை 4.45 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று அக்கட்சி அலுவலகத்தின் வளாகத்திலேயே கேப்டன் விஜயகாந்த்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. விஜயகாந்த்தை கடைசியாக பார்த்துவிட வேண்டுமென்று தொண்டர்களும், ரசிகர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்தும் சென்னைக்கு படை எடுத்திருக்கின்றனர். நேற்றே தேமுதிக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் கோயம்பேட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.
கூடியவர்கள் எல்லாம் இனி இப்படி ஒரு நல்ல மனிதனை பார்க்க முடியாதே என்று கதறி அழுதபடி நின்றுகொண்டிருந்தனர். இன்றும் கூட்டம் அதிகம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது. போய் வாருங்கள் கேப்டன்..


Click it and Unblock the Notifications











