உனக்காக இந்த நாடே அழுவுதப்பா.. தீயாக பரவும் ரமணா பட சீன்.. ஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்தை மறக்கல!
சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் இன்று காலை 6.10 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் காலமானார். அவரது வயது 71. சாலி கிராமத்தில் இருக்கும் விஜயகாந்தின் வீட்டில் இருந்து அவரது உடல் அலங்கார ஊர்தி மூலமாக தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு சென்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மேம்பாலம் முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிக்கின்றன.
எம்ஜிஆர் இறுதி ஊர்வலம் மெரினா கடற்கரையில் நடைபெற்ற போது மக்கள் வெள்ளம் எப்படி திரண்டதோ அதே போல கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்திற்கு மக்கள் அலை கடலாக திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் காலை முதலே #விஜயகாந்த் டிரெண்ட் செய்யப்பட்டு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், ரமணா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

ரமணா: 2001ம் ஆண்டு அஜித்தின் தீனா படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸுக்கு அடுத்து தனது படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார் விஜயகாந்த். 2002ம் ஆண்டு வெளியான ரமணா திரைப்படம் இன்று வரை விஜயகாந்த் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களாலே மறக்க முடியாத படமாக உள்ளது. ஊழலுக்கு எதிரான போராட்டம், மன்னிப்பு தமிழில் எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை, யாரு சார் அவரு எனக்கே பார்க்கணும் போல இருக்கு என அந்த படத்தின் ஒவ்வொரு வசனமும் காட்சியும் ரசிகர்கள் மனங்களில் நிறைந்திருக்கிறது.

மரண தண்டனை கிளைமேக்ஸ்: தமிழ் சினிமாவில் பொதுவாகவே கிளைமேக்ஸில் ஹீரோக்கள் மரணிக்கக் கூடாது என்கிற எழுதப்படாத ஒரு விதி உள்ளது. ரசிகர்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்பதால் நடிகர்களும் அப்படி நடிக்க மாட்டார்கள். ஆனால், ரமணா படத்தில் அவர் தப்பிக்க வழி இருந்தும் நானும் சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி தப்பித்தால் நல்லாவா இருக்காது என்று சொல்லி விட்டு மரண தண்டனையை ஏற்று ஒவ்வொருவர் நெஞ்சிலும் விதையாக மாறுகிறேன் என மரண தண்டனை கிளைமேக்ஸ் இடம்பெற்றிருக்கும். அதை பார்த்து விட்டு தியேட்டரில் இருந்து வெளியேறிய அத்தனை ரசிகர்கள் கண்களும் கண்ணீர் குளமாகவே இருந்தன.
ஏ.ஆர். முருகதாஸ் மறக்கல: தீனா படத்துக்குப் பிறகு தனக்கு ரமணா எனும் பெரிய படத்தை கொடுத்து தூக்கி விட்டவர் கேப்டன் விஜயகாந்த் என்பதை இன்னமும் ஏ.ஆர். முருகதாஸ் மறக்கவில்லை. விஜயகாந்த் மரணித்த செய்தி அறிந்ததும் நேரடியாக ஓடோடி வந்து அவருக்கு இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.
சிம்ரன் இரங்கல்: கண்ணுப் பட போகுதய்யா, ரமணா உள்ளிட்ட படங்களில் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த நடிகை சிம்ரனும் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா உள்ளிட்ட சில நடிகைகளும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாடே அழுவுதப்பா: இந்நிலையில், ரமணா படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் முதல்வராக நடித்திருந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் விஜயகாந்தை சந்தித்துப் பேசும் காட்சி வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. "ஒரு மனுஷன் பிரியும் போது தாய் அழுதா அவன் ஒரு நல்ல மகன், அவனோட புள்ளைங்க அழுதா அவன் நல்ல தகப்பன், அவன் கூட பொறந்தவங்க அழுதா அவன் நல்ல சகோதரன், அவன் பிரிவுக்காக நாடே அழுதா அவர் ஒரு நல்ல தலைவன்.. உனக்காக இந்த நாடே அழுவுதப்பா!" என பேசிய வசன வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து விஜயகாந்த் நல்ல தலைவன் என்றும் அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











