கேப்டன் விஜயகாந்த் மறைவு..செல்லமகன் சண்முக பாண்டியனின் உருக்கமான பதிவு!
சென்னை: விஜயகாந்தின் மறைவு குறித்து அவரது மகன் சண்முக பாண்டியன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே அவர் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி பரவியது. இதன்பின் அவர் நலமுடன் இருப்பதாக பிரேமலதா வீடியோ வெளியிட்டு இருந்தார். இதையடுத்து. திரும்பிய விஜயகாந்த், டிசம்பர் 14ந் தேதி சென்னை திருவேற்காட்டில் தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்தை ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிறகு டிசம்பர் 26ந் தேதி செவ்வாய்க்கிழமை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதரின் முகத்தை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று,கட்சி அலுவலகத்தின் வாசலில் லட்சக்கணக்கில் கூடினார்கள்.
கால்கடுக்க காத்திருந்த ரசிகர்கள்: கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், அவரது உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பின் தீவுத்திடலில் அலைகடல் என தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து விஜயகாந்தின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. வழி நெடுகிலும் கால்கடுக்க காத்திருந்த மக்கள் அவரின் உடலைப்பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கேப்டன் விஜயகாந்த் பெயர்: இதையடுத்து, விஜயகாந்த்திற்கு பொது இடத்தில் மணிமண்டபம் அமைத்து தர வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும்,கேப்டனுக்கு தலைமை கழகத்திலேயே மிகப் பெரிய சமாதி அமைக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் பேசினார் இதையடுத்து, கோயம்பேட்டில் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அருகில் உள்ள வளைவு சந்திப்பு சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சதுக்கம் என பெயரிடப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது கேப்டன் விஜயகாந்த் ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.
உருக்கமான பதிவு: இந்நிலையில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தனது தந்தையுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து உருக்கமான பதிவிட்டுள்ளார். அதில், எனது தந்தை இறப்பிற்கு இதயப்பூர்வமாக இரங்கலை தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. எனது தந்தையின் இறுதி ஊர்வலம் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தை நோக்கி வந்த போது சாலைகள், பாலங்கள் மீது லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். எங்கள் அப்பா விட்டுச் சென்ற பாரம்பரியத்தையும், அவர் வாழ்ந்த வாழ்க்கையையும், அவர் சம்பாதித்த அன்பையும் காட்டுகிறது. அப்பாவின் இந்த பேரழிப்பிலிருந்து மீண்டு வர உங்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்கு இதமாக உள்ளது. என் அப்பா, நம் கேப்டனின் ஆன்மா சாந்தியடையட்டும் என சண்முக பாண்டியன் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











