41 பேர் பலி.. விஜய் இப்படி செஞ்சுட்டாரே.. மோசம்.. எஸ்.ஏ.சி மனநிலை என்ன?.. சாப்பிடவே இல்லையாம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் உங்கள் விஜய் நா வரேன் என்கிற பெயரில் அரசியல் சுற்றுப்பயணத்தை வாராவாரம் நடத்துகிறார். அந்தவகையில் கடந்த சனிக்கிழமை கரூரில் பேசியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அதுதொடர்பாக மூன்று நாட்கள் கழித்து அவர் வெளியிட்டிருந்த வீடியோவும் பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.
அரசியல் பிரவேசம் செய்திருக்கும் விஜய் கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியிருக்கிறார். திருச்சியில் அவர் ஆரம்பித்தபோதே அவரது தொண்டர்கள் அத்துமீறி பல விஷயங்களில் ஈடுபட்டார்கள். அடுத்தடுத்து அவர் சென்ற இடங்களிலும் அவர்கள் அப்படித்தான் நடந்துகொண்டார்கள். அந்தவகையில் கரூரிலும் அவர்களது செயல்பாடு ரசிக்கும்படியாக இல்லை.
41 பேர் உயிரிழப்பு: கரூரில் விஜய் பேசிக்கொண்டிருந்தபோதே அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துவிட்டார்கள். அவர்களில் குழந்தைகளும், பெண்களும் சரிபாதி என்பது துயரத்துக்கு உட்பட்டது. இந்த அசம்பாவிதம் குறித்து அவருக்கு செய்தி தெரிந்தும் செய்தியாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் விமானம் ஏறி சென்னை சென்றதை யாருமே விரும்பவில்லை.

விஜய் வெளியிட்ட வீடியோ: சென்னை சென்றவர் பத்து வரிகளுக்குள் ஒரு ட்வீட்டை போட்டு தனது இரங்கலை தெரிவித்தார். பிறகு அரசு துரிதமாக செயல்பட்டு இந்த விவகாரத்தில் விசாரணையை ஆரம்பித்தது. ஆனால் விஜய்யோ சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அவர் வெளியிட்ட வீடியோ இந்த விஷயத்தின் தீவிரத்தன்மையை குறைக்கும் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள்.
விஜய் பேசியது: மாறாக அவர் பேசியது எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல் அமைந்துவிட்டது. அந்த வீடியோவில் அவர், "சி.எம்.சார் பழி வாங்க வேண்டுமென்று தோன்றினால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். வீட்டில் அல்லது ஆஃபிஸில்தான் இருப்பேன்" என்று கூறினார். மேலும் அவரது பேச்சு இந்த விஷயத்தில் அரசு மீது பழி போட்டு தான் தப்பித்துக்கொள்ளும் நோக்கத்தில் இருந்ததாக கண்டனங்கள் எழுந்தன. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தவெகவுக்கு எதிராக நீதிமன்றமும் காட்டமான கருத்தைத்தான் முன்வைத்துவருகிறது.
எஸ்.ஏ.சி மனநிலை: முக்கியமாக விஜய் மீது ஏன் இன்னமும் வழக்கு பதியவில்லை என்றும் கேட்டுவிட்டது. இதனால் இந்த விவகாரம் அடுத்தடுத்து என்ன மாதிரி பயணிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் தேனி கண்ணன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், "இந்த விஷயத்தை தனது மகன் விஜய் இப்படி மோசமாக ஹேண்டில் செய்துவிட்டாரே என்று எஸ்.ஏ.சந்திரசேகர் சோகத்தில் இருக்கிறார். விஜய் வீடியோ வெளியிட்ட அடுத்த நாளிலிருந்து எதுவுமே சாப்பிடாமல் இருக்கிறார் என்றுதான் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











