Vijay - விஜய் இல்லாமல் நடக்கப்போகும் ஆலோசனைக் கூட்டம்?.. இது புதுசா இருக்கே
சென்னை: Vijay Makkal Iyakkam (விஜய் மக்கள் இயக்கம்) விஜய் வெளிநாடு சென்றிருக்கும் சூழலில் அவரது மக்கள் இயக்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. பீஸ்ட், வாரிசு தோல்விக்கு பிறகு இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க விஜய் காத்துக்கொண்டிருக்கிறார்.

அரசியல் ஆசை: விஜய்க்கு பல வருடங்களாகவே அரசியல் ஆசை இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரது செயல்பாடுகளும் அப்படித்தான் இருக்கின்றன. இதன் காரணமாக தளபதி விரைவில் அரசியலில் களமிறங்கி கோட்டையை பிடிப்பார் என்ற பெரும் ஆவலோடு அவரது ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்காக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அவர்கள் நலத்திட்ட உதவிகளை செய்துவருகின்றனர்.
களத்துக்கு வந்த விஜய்: இவ்வளவு காலம் மக்கள் இயக்க நிர்வாகிகளை வைத்து நலத்திட்டங்களை செய்துகொண்டிருந்த விஜய் கடந்த ஜூன் மாதம் தானே நேரடியாக களத்தில் இறங்கினார். அதன்படி 234 தொகுதிளிலும் 10 மற்றூம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று பேரை சந்தித்து சால்வை அணிவித்து ஊக்கத்தொகையை வழங்கினார். அந்த விழாவில் வாக்குகள் குறித்தும், தலைவர்கள் குறித்தும் விஜய் பேசிய பேச்சு பெரும் கவனத்தை ஈர்த்தன.
இரவு நேர பாடசாலை: அந்த விழாவுக்கு பிறகு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர பாடசாலை தொடங்கப்பட்டது. கல்வி விருது விழா, இரவு நேர பாடசாலை தொடக்க விழா உள்ளிட்டவைகளை வைத்து பார்க்கும்போது விஜய் அரசியலுக்கு வருவது 99 சதவீதம் உறுதியாகிவிட்டது. இன்னும் சில வருடங்களில் அதிகாரப்பூர்வமாக அவரே அறிவிக்கலாம் என கருதப்படுகிறது.
வெளிநாடு பறந்த விஜய்: இதற்கிடையே லியோ படத்தில் மும்முரமாக நடித்துக்கொண்டும் மக்கள் இயக்க செயல்பாடுகளில் கவனம் செலுத்திக்கொண்டும் இருந்த விஜய் ரெஸ்ட் எடுப்பதற்காக வெளிநாடு பறந்திருக்கிறார். லண்டனில் இருக்கும் தனது மாமியார் வீட்டுக்குத்தான் அவர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்தியா திரும்பி லியோ படத்தின் டப்பிங்கை முடிக்கவிருக்கிறார்.
ஆலோசனைக் கூட்டம்: இந்நிலையில் விஜய் இல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதற்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்கவிருக்கிறார் என்றும்; ஆகஸ்ட் ஐந்து மற்றும் ஆறாம் தேதிகளில் பனையூரில் இந்தக் கூட்டம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
அதன்படி ஆகஸ்ட் 5ஆம் தேதி விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணியுடனும், ஆறாம் தேதி கேரள மாநில ரசிகர்களுடனும் ஆலோசனை நடக்கலாம் என தெரிகிறது. அதுமட்டுமின்றி பெரும்பாலும் விஜய் வெளிநாட்டிலிருந்து திரும்பிவிட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அப்படி வரும்பட்சத்தில் அவர் தலைமையிலேயே ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











