ஹீரோவாக அறிமுகமாகும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்?.. அப்பா ரூட்டில் மகன்?
சென்னை: விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் சில நாட்களில் ஜனநாயகன் வெளியாவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே சிக்மா ரிலீஸ் தள்ளிப்போயிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகப்போகிறார் என சொல்லப்படுகிறது.
நடிகர் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். போக்கிரி, வேட்டைக்காரன் ஆகிய படங்களில் தலை காண்பித்த அவர்; அதற்கு பிறகு பள்ளி படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று சினிமா தொடர்பான படிப்பை படித்தார். அதனையடுத்து சங்கீதா தரப்பு முயற்சி மேற்கொண்டதன் பலனாக; லைகா நிறுவனத்தின் பேனரில் சிக்மா படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். அதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க; தமன் இசையமைத்திருக்கிறார்.
புகழும் டீம்: சிக்மா படத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் ஜேசன் சஞ்சய்யை புகழ்ந்து தள்ளுகிறார்கள். முக்கியமாக ஹீரோ சந்தீப் தான் கொடுக்கும் பேட்டிகளில் பெரும்பாலும் ஜேசன் குறித்து பேசிவிடுகிறார். அவர் பெரிய ஸ்டாரின் மகன் என்ற பந்தா இல்லாமல் இருக்கிறார்; நினைத்திருந்தால் ஹீரோவாக அறிமுகமாகி இருந்திருக்கலாம் என்று பலரும் சொல்கிறார்கள். அனைவருமே சொல்லும் பொதுவான விஷயம் என்னவென்றால்; ஜேசனின் சிம்ப்ளிசிட்டிதான்.
கவனம் ஈர்த்த ட்ரெய்லர்: அவரது ஒர்க்கிங் ஸ்டைலும் அனைவரையும் ஆச்சரியப்படுத்திவிட்டது என்றே தெரிகிறது. மேலும், முதல் பட இயக்குநர் மாதிரியே அவரது வேலைப்பாடு எதுவும் தெரியவில்லை. அண்மையில் வெளியான ட்ரெய்லர்கூட மேக்கிங் ரீதியாக ரிச்சாகவே இருந்தது. திரைக்கதை மட்டும் ப்ளஸ்ஸாக இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக சிக்மா தரமான சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. படமானது ஜூலை 31ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறுக்கே வரும் ஜனநாயகன்?: ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக ஜேசனின் தந்தை விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது. அநேகமாக இந்த மாதத்துக்குள் அப்படத்தை ரிலீஸ் செய்துவிடுவார்கள். எனவே இந்த சமயத்தில் வந்தால் சிக்மா சின்னாபின்னமாகிவிடும் என்பதால் படத்தில் ரிலீஸை ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் என்றும்; விரைவில் அதிகார்ப்பூர்வ ரிலீஸ் தேதி வரும் எனவும் சொல்லப்படுகிறது.
புதிய தகவல்: இந்நிலையில் ஜேசன் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஜிகே தமிழ்க்குமரன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் ஜேசன் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறாராம். கோலிவுட்டில் மிக பிரபலமாக இருக்கும் ஹீரோ இந்தப் படத்தை இயக்குவார் என்றும்; சிக்மா ரிலீஸுக்கு பிறகு ஜேசன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வரும் எனவும் திரைத்துறையில் விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
ஹீரோவாக வெல்வாரா?: ஜேசன் சஞ்சய் ஹீரோவாக மாறுவார் என்றுதான் அப்போதிருந்தே பலரும் சொன்னார்கள். ஆனால் அவர் இயக்குநராகிவிட்டார். அது விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட்தான். இப்போது விஜய்யும் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார்; எனவே ஜேசன் ஹீரோவாக அறிமுகமானால்; அவர் விஜய்யின் தொடர்ச்சியாக ஜொலிப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவர்கள். ஏற்கனவே, சிக்மா படம் தொடர்பான அறிவிப்பு வந்ததிலிருந்து இப்போதுவரை ஜேசனுக்கு விஜய் ஒரு வாழ்த்துகூட சொல்லவில்லை என்ற விமர்சனமும் எழுந்திருந்ததும் நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications


