100 தடவைக்கு மேல.. அந்த படத்தை பார்த்த விகாஸ் துபே.. அதே ஸ்டைலில் போலீசாரை கொன்று குவிப்பு
லக்னோ: 8 போலீசாரை கொடூரமாக சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்படும் ரவுடி விகாஸ் துபே, கேங்ஸ்டர் பட பிரியர் என்பது தெரியவந்துள்ளது.
கொலை முயற்சி குற்ற வழக்கில் விகாஸ் துபேவை கைது செய்ய திட்டமிட்ட போலீசார், அவரை கைது செய்ய விக்ரு கிராமத்திற்கு 25 போலீசாருடன் சென்றிருந்தனர்.
ஆனால், காவல் துறையில் இருக்கும் சில கருப்பு ஆடுகள், விகாஸ் துபேவை அலர்ட் செய்த நிலையில், மறைந்திருந்து தனது கூட்டாளிகளுடன் சினிமாவில் வருவது போல போலீசாரை திட்டமிட்டு சுடத் தொடங்கினர்.

8 போலீசார் சுட்டுக் கொலை
மறைந்திருந்து நடத்திய தாக்குதலுக்கு, போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். அந்த சண்டையில், விகாஸ் துபே, காவல் துணை கண்காணிப்பாளர் தேவேந்திர மிஸ்ரா உள்ளிட்ட 8 பேரை சுட்டுக் கொன்று விட்டு, அங்கிருந்து தனது கூட்டாளிகளுடன் தப்பிச் சென்றுள்ள சம்பவம், உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

போலீஸ் ஸ்டேஷனில்
லோக்கல் கேங்ஸ்டராக பல முறைகேடான செயல்களை செய்து வந்த விகாஸ் துபேவுக்கு அரசியல் செல்வாக்கு மற்றும் காவல் துறையில் நண்பர்கள் ஏராளம். கடந்த 2001ம் ஆண்டு சினிமாவில் வருவதை போல, போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து, அப்போதைய அமைச்சர் சந்தோஷ் சுக்லாவை சுட்டுக் கொன்று தப்பிச் சென்ற வரலாறுகளும் உள்ளன.

100 தடவைக்கும் மேல்
கான்பூர் கேங்ஸ்டரான விகாஸ் துபேவுக்கு பாலிவுட்டில் சன்னி தியோல் நடித்த, 'அர்ஜுன் பண்டிட்' படம் என்றால் உயிராம். 1999ம் ஆண்டு வெளியான இந்த படத்தை சுமார் 100 தடவைக்கும் மேல், விகாஸ் துபே பார்த்துள்ளதாக, லோக்கல் ரிப்போர்ட்டர்கள் தகவல் கொடுத்துள்ளனர். மேலும், தன்னை 'விகாஸ் பண்டிட்' அல்லது ‘பண்டிட்' என்றே அழைப்பதையும் அவர் விரும்பி உள்ளார்.

அர்ஜுன் பண்டிட்
இயக்குநர் ராகுல் ராவல் இயக்கத்தில், சன்னி தியோல் மற்றும் ஜூஹி சாவ்லா நடிப்பில் வெளியான படம் அர்ஜுன் பண்டிட். தனது சகோதரியை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூர வில்லனை பழிவாங்க, சாதுவான ஹீரோவை காதலித்து, அவனை கொடூர கேங்ஸ்டராக மாற்றும் நாயகியின் கதை தான் அர்ஜுன் பண்டிட்;

தலைக்கு 2.5 லட்சம்
8 போலீசாரை கொடூரமாக சுட்டுக் கொன்ற நிலையில், விகாஸ் துபேவின் தலைக்கு 2.5 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது யோகி ஆதித்யநாத் அரசு. மேலும், 300க்கும் மேற்பட்ட தனிப்படையை அமைத்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், சல்லடை போட்டு விகாஸ் துபேவை தேடி வருகின்றனர்.

கருப்பு ஆடுகள்
நிஜத்தில் நடக்கும் பல விசயங்களே சினிமா ஆகின்றன. சினிமாவில் காட்டப்படும் சில விசயங்கள், நிஜத்திலும் நடப்பதையும் பார்க்கின்றோம். 8 காவல் அதிகாரிகளின் உயிர்கள் போன நிலையிலும், இன்னும் சில கருப்பு ஆடுகள், விகாஸ் துபேவை தப்பிக்க வைத்து வருவதாகவும், விகாஸ் துபேவை சில அரசியல் தலைவர்களும் பாதுகாத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











