Vikram Birthday - 1000 ரூபாய் இல்லாத சியான்..உதவிய நடிகர்.. விக்ரம் பிறந்தநாளில் ஒரு சுவாரஸ்யம்
சென்னை: Chiyaan Vikram Birthday (சியான் விக்ரம் பிறந்தநாள்) சியான் விக்ரம் இன்று தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவரே பகிர்ந்த ஒரு சுவாரஸ்ய தகவலை இதில் பார்க்கலாம்.
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். சினிமாவில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் பத்து வருடங்கள் கடுமையான போராட்டங்களை சந்தித்தவர். விளம்பர படம், டப்பிங் கொடுப்பது என சினிமாவில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து நம்பிக்கையுடன் நகர்ந்துகொண்டிருந்தார். அப்படிப்பட்ட சூழலில் என் காதல் கண்மணி, பி.சி.ஸ்ரீராமின் மீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக எந்த திருப்புமுனையும் கிடைக்கவில்லை.
சேர்ந்து ஜெயிப்போம் பாலா: நிலைமை போராட்டமாக போய்க்கொண்டிருக்க இயக்குநர் பாலா சேது கதையை விக்ரமிடம் கூறினார். அப்போது விக்ரம் கூறிய வார்த்தைகள் இவை, "நாம் செய்வோம் பாலா. பல வருஷமா இருக்கேன் ஆனா ஒன்னும் நடக்கல. என் சொந்தக்காரர் ஒருத்தர் இருக்கார். அவரும் சினிமாக்காரர்தான். எனக்கு ஆக்சிடெண்ட் ஆகி படுத்து இருந்தப்போது இந்தக் கால வெச்சுக்குட்டு எப்டி நீ சினிமாவுல ஜெயிக்கப்போறனு ரொம்ப மட்டமா பேசுனார். நாம் ஜெயிப்போம் பாலா. சேர்ந்து ஜெயிப்போம்". இந்த வார்த்தைகளில் புரிந்துகொள்ளலாம் விக்ரம் பட்ட அவமானங்களையும், வெல்ல வேண்டும் என்ற வெறியையும்.

திருப்புமுனை தந்த சேது: அதனையடுத்து சேது படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்தபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் உணவே உண்ணாமல் குப்பையோடு குப்பையாக ஏர்வாடியில் கிடப்பாராம் விக்ரம். அப்போது அதை பார்த்த பாலா, இந்தப் படம் வந்த பிறகு உனது வாழ்க்கையே மாறும் பார் என நினைத்துக்கொள்வாராம். அவர் நினைத்தது போலவே படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. குறிப்பாக விக்ரமின் நடிப்பை பார்த்து அனைவருமே மிரண்டு போனார்கள்.
கமர்ஷியல் பாதையில் விக்ரம்: சேது வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன் பிறகு காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களில் நடித்தாலும், மறுபக்கம் தில், தூள், சாமி என கமர்ஷியல் பாதையிலும் வெற்றிகரமாக பயணப்பட்டார். அது அவ்வளவு சாதாரணமில்லை. ஏனெனில் கமர்ஷியல், கலை என இரட்டை குதிரைகளில் சவாரி செய்தது கமல் ஹாசன் போன்ற வெகு சிலர்தான். அதை விக்ரம் அவ்வளவு நேர்த்தியாக செய்திருந்தார்
நோ ஹேட்டர்ஸ்: கிரிக்கெட்டில் எப்படி ராகுல் டிராவிட்டுக்கு ஹேட்டர்ஸே இல்லையோ. அதேபோல் சினிமாவில் விக்ரமுக்கும். விக்ரம் என்றாலே தனது நடிப்பில் கவனம் செலுத்திவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார். அதனால் அவரை இதுவரை யாரும் வெறுக்கவே இல்லை. அவரது படங்கள் வெளியானால் நிச்சயம் அந்தப் படம் ஹிட்டாக வேண்டும் என பிற நடிகர்களின் ரசிகர்களும் எண்ணிக்கொள்வர். அந்த அளவுக்கு அவர் ரசிகர்களை தனது திறமையால் ஈர்த்து வைத்திருக்கிறார்.

மனிதாபிமானி விக்ரம்: நடிகர்கள் என்றாலே பொது வெளியில் ரசிகர்களையோ, பத்திரிகையாளர்களையோ சந்திக்கும்போது கொஞ்சம் இடைவெளி காண்பிப்பார்கள். ஆனால் விக்ரம் அப்படி இல்லை. அவரைப் பொறுத்தவரை தன்னிடம் யார் வந்து பேசினாலும் முகம் சுளிக்காமல் செம ஃபன்னாக நடந்துகொள்வார். அதனாலேயே அவருக்கு ஒரு தரப்பினர் ரசிகர்களாக இருக்கின்றனர்.
குறிப்பாக ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் விக்ரமை பார்க்க அருகில் வந்தபோது மலையாள நடிகர் திலீப்குமாரும், அங்கிருந்த பாடிகார்டுகளும் அந்த ரசிகரை தடுக்க முயன்றனர். அதனை பார்த்து துடித்துப்போன விக்ரம் உடனே அவர்களை தடுத்து அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார். அந்த வீடியோ சில வருடங்களுக்கு முன்பு இணையத்தை ஆக்கிரமித்தது. அந்த வீடியோ ஒன்று போதும் ரசிகர்கள் மீது விக்ரம் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம்.
செம ஃபன் விக்ரம்: சினிமா உலகம் போட்டியும், பொறாமையும் நிறைந்தது. அதனால் ஒரு நடிகர் மற்றொரு நடிகருடன் சகஜமாக பேசுவதே அரிது. அப்படியே பேசினாலும் அது மேடை நாகரிகத்திற்காகத்தான் இருக்கும். ஆனால் விக்ரம் அதிலும் விதிவிலக்கு. அவர் பிற நடிகர்களுடன் எந்த ஈகோவும் இல்லாமல் பழகி கலாய்த்து தள்ளிவிடுவார்.அதனால் விக்ரம் என்றாலே செம ஃபன்தான் என்ற கருத்து திரையுலகிலேயே இருக்கிறது.
1000 ரூபாய் இல்லாத விக்ரம்: ஏதேனும் நிகழ்ச்சிகள் நடந்தால் அதை முடித்துவிட்டு பிற நடிகர்களுடன் விக்ரம் வெளியில் செல்வது வழக்கமாம். ஆனால், விக்ரமிடம் எப்போதும் பர்ஸே இருக்காதாம். தனது உதவியாளரிடம்தான் 50 ரூபாய் கொடு, 100 ரூபாய் கொடு என கேட்டு பெற்றுக்கொள்வாராம். அதேபோல் ஒருமுறை வெளிநாட்டில் இருந்தபோது ஜெயம் ரவியுடன் வெளியில் சென்றிருக்கிறார் சியான்.

அங்கு ஹோட்டல் ஒன்றில் ட்ரிங்க்கை ஆர்டர் செய்துவிட்டு, நேராக ஜெயம் ரவியிடம் சென்று மச்சான் உனட்ட பணம் இருக்கா இருந்தா கொடு என்பாராம். அதற்கு ஜெயம் ரவியும் பில் செட்டில் செய்வாராம். இப்படி பல முறை விக்ரமுக்கு 1000 ரூபாய் கொடுத்து ஜெயம் ரவி உதவியிருக்கிறாராம். இதனை செம ஜாலியாக ஒரு மேடையில் கூறினார் விக்ரம்.


Click it and Unblock the Notifications











