அறிமுகப்படுத்திய ஸ்ரீதர் மரணத்துக்குக் கூட வராத விக்ரம்! - நினைவுகூரும் கலைஞானம்
தன்னை நாயகனாக அறிமுகப்படுத்திய பிரபல இயக்குநர் ஸ்ரீதர் மரணத்துக்குக் கூட நடிகர் விக்ரம் வரவில்லை என்று கூறியுள்ளார் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைஞானம்.
இன்று முன்னணி நடிகராக உள்ள விக்ரம் நாயகனாக அறிமுகமானது தந்துவிட்டேன் என்னை என்ற படத்தில்தான். ரோகிணிதான் இதில் அவருக்கு ஜோடி.
இயக்குநர் ஸ்ரீதர் உடல் நலம் குன்றி, மரணத்தின் விளிம்பில் இருந்த போது விக்ரம் முதல் நிலை நடிகராகிவிட்டிருந்தார் (இந்த நிலைக்கு வர அவர் பட்ட பாடுகள் சாதாரணமானதல்ல!).

இதுகுறித்து கலைஞானம் நக்கீரன் பத்திரிகையில் எழுதியிருப்பதாவது:
சில வருடங்களுக்குப் பிறகு தி.நகர் வீட்டை விற்றுவிட்டு அடை யாறு பக்கம் குடியேறினார் ஸ்ரீதர். அதன்பின் கை, கால் செயல்படாமல் இருந்து... இறந்தும் விட்டார்.
திரையுலகமே சென்று ஸ்ரீதருக்கு அஞ்சலி செலுத்தியது. நானும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினேன். அப்போது சோகமயமாக நின்றிருந்த ஸ்ரீதரின் ஒன்றுவிட்ட தம்பியும், பிரபல டைரக்டருமான சி.வி.ராஜேந்திரன் என்னிடம் வந்தார்.
"விக்ரமை ஹீரோவா அறிமுகப்படுத்தி 'தந்துவிட்டேன் என்னை' படம் எடுத்தார். அதில் பெரும் நஷ்டம். வட்டிக்கு மேல் வட்டி ஏறி... பெரும் மன உளைச்சலில்தான் அவரை நோய் தாக்கியது. கை, கால் விழுந்து விட்டது. பாருங்க... அவர் இறப்புக்கு எல்லாரும் அஞ்சலி செலுத்தினாங்க. ஆனா.. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட விக்ரம் வரலை. இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' என வேதனைப்பட்டார்.
"ராஜேந்திரன் சார்... ஏத்திவிட்ட ஏணியை எட்டி உதைக்கிற பலரை நான் என் அனுபவத்தில் பார்த்திருக்கேன். அதேபோல ஏத்திவிட்ட ஏணி மரத்தை தெய்வமாக கொண்டாடுனவங்க... அண்ணன்மார்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்கள்தான். இதுவும் என் அனுபவம்தான்'' என அவரை ஆசுவாசப்படுத்தினேன்.
-இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications











