தமிழ் சினிமாவின் மானம், மரியாதையை காப்பாற்றிய ’விக்ரம்’.. கமலை பாராட்டிய தயாரிப்பாளர் கேயார்!
சென்னை: விக்ரம் படம் மூலம் நடிகர் கமலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளதாகவும் இன்றைய தேதியில் அவர் தான் கோலிவுட்டில் நம்பர் ஒன் என்றும் தயாரிப்பாளர் கேயார் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது தமிழ் சினிமாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த ஜூன் 3ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியானது.
இரண்டே வாரத்தில் 300 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய சாதனையை அந்த படம் நிகழ்த்தி இருக்கிறது.

300 கோடியை தாண்டியாச்சு
விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு 4 ஆண்டுகள் கழித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வெளியான இரு வாரங்களில் உலகளவில் 300 கோடி வசூலை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் கேயார் Indiaglitzக்கு அளித்த பேட்டியில் தமிழ் சினிமாவின் மானத்தைக் காப்பாற்றியவர் கமல் என பேசியிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

100 கோடி நாயகர்கள்
பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப் 2 படங்கள் இந்தியளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி பான் இந்திய படமாக வெற்றி பெற்று வரும் நிலையில், கோலிவுட்டின் 100 கோடி நாயகர்களான ரஜினிகாந்த், அஜித், விஜய் படங்கள் எல்லாம் கடந்த தீபாவளி, பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகியும் எந்தவொரு பெருமையையும் சேர்க்கவில்லை.

மானத்தை காப்பாற்றிய கமல்
தமிழ் சினிமாவை மேடைக்கு மேடை பல சினிமா பிரபலங்களே கழுவி ஊற்றி வந்தனர். ஆனால், சரியான காரியத்தை செய்து அதனை மீண்டும் தலை நிமிர்த்த வேண்டும் என்கிற வேலையை செய்தார் கமல். மற்ற மாநிலங்கள் எள்ளிய நகையாடிய நேரத்தில் தமிழ் சினிமாவின் மானத்தையே காப்பாற்றி இருக்கிறார் கமல்.

1000 கோடி வரலையே
விக்ரம் படம் கேஜிஎஃப் 2வுக்கு சரியான போட்டியென பலர் சொன்னாலும், அந்த படம் 1000 கோடி வசூலை எடுக்கவில்லையே என எழுப்பிய கேள்விக்கு, கேஜிஎஃப் முதல் பாகத்தின் வீச்சு தான் இரண்டாம் பாகம் 1000 கோடி வசூலை எடுக்கக் காரணம். விக்ரம் 3 வந்தால் நிச்சயம் 1000 கோடி வசூல் இங்கேயும் சாத்தியம் என கேயார் கூறியுள்ளார். மேலும், இந்தி பெல்ட்டில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அதனை ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப் அளவுக்கு புரமோட் செய்யாதது தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

50 கோடி ஷேர்
விக்ரம் படம் வெளியான 7 நாட்களிலேயே கமலுக்கு 50 கோடி ஷேர் வந்து விட்டது. எந்தவொரு ஹீரோவுக்கும் இந்த அளவுக்கு ஷேர் சமீபத்தில் கிடைத்தது இல்லை என்பது தான் உண்மை. விக்ரம் படத்தின் மூலம் மிகப்பெரிய லாபத்தை சந்தித்துள்ளார் கமல். அவருடைய முகத்திலேயே அந்த சந்தோஷம் தெளிவாக தெரிய அதுதான் காரணம் என்றார்.
Recommended Video

நம்பர் ஒன்
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டார் கமல்ஹாசன். இந்த இடம் அவருக்கு என்றோ கிடைத்திருக்க வேண்டியது. பல காரணங்கள் மற்றும் அவரது சில கொள்கைகள் காரணமாக அது சாத்தியமாகவில்லை. தொடர்ந்து இதுபோன்ற படங்களை கமல் செய்தால், நிச்சயம் இந்த இடத்தை அவரால் தக்க வைக்க முடியும் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











