Thangalaan Box Office: விக்ரம் உழைப்பு வீண் போகல.. ரூ.100 கோடிகளை அள்ளிய தங்கலான்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளாவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. வரும் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் இந்தியிலும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் முழுமையாக முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் வசூல் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூபாய் 26. 44 கோடிகள் வசூல் செய்தது. இதுமட்டும் இல்லாமல், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் வசூல் அதிகரித்துக்கொண்டே இருந்தது. குறிப்பாக படம் ரிலீஸான பின்னர் வந்த வார இறுதி நாட்களில் வசூல் நன்றாகவே அதிகரித்தது. படத்திற்கு சிலர் எதிர்மறையான விமர்சனங்களைக் கொடுத்து வந்தாலும், படத்திற்கு ரசிகர்கள் வந்த வண்ணம் இருந்தனர். சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக மாறியது. அதற்கு காரணம் படம் பேசும் அரசியலைப் புரிந்து கொண்ட ரசிகர்கள், படம் குறித்து வாய்வழியாகவே, பேசி பேசி படத்தினை மற்றவர்கள் பார்க்கவும் ஊக்குவித்தனர்.

அரசியல் தளத்தில் இருக்கும் பல தலைவர்கள் படத்தினை பாராட்டினர். இதனால் படத்திற்கு விக்ரம் ரசிகர்களைக் கடந்தும், பொதுமக்கள் ரிப்பீட் ஆடியன்ஸாக வந்து படத்தினைக் கொண்டாடினர். படம் குறித்த விமர்சனங்களில் மிகவும் முக்கியமானது, படம் பேசும் அரசியல்தான். நாகர்கள், பௌத்தம், பூர்வகுடி மக்கள் என கோலார் தங்கவயலை கதைக்களமாகக் கொண்டும், மாய எதார்த்த திரைக்கதையைக் கொண்டும் படத்தினை இயக்கியுள்ளார் பா. ரஞ்சித். இந்த காரணங்களுக்காகவே படத்தினை ரசிகர்கள் பாராட்டினர். குறிப்பாக விக்ரம் போன்ற உலகம் போற்றும் நடிகரை மிகச் சரியாகப் பயன்படுத்தி அவருக்கும் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது மட்டும் இல்லாமல், தான் கூறவந்த கருத்தையும் தெளிவாகக் கூறினார் என பாராட்டுகள் குவிந்தது.

படம் தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் மாபெரும் வசூல் வேட்டையை நடத்தியது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன தெலுங்கு படங்கள் சரியாகப் போகாததால், தங்கலான் மாபெரும் வெற்றியைப் பெற்றது. படத்தின் வெற்றி விழாவை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் படக்குழு கொண்டாடியது.
இசை: ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசை படத்திற்கு பெரிய பலம். பல்வேறு பழங்குடி இன மக்களின் இசையை தேடித்தேடி கோர்த்துக் கொடுத்துள்ளார். பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, ட்ரெண்டானது. படத்தின் மற்றொரு கதாநாயகன், பலம், தூண் என இசையைக் குறிப்பிடலாம்.

வசூல் விபரம்: படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 26.44 கோடிகளை வசூல் செய்தது. இதனை படக்குழுவே தெரிவித்தது. மேலும் 2024ஆம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படமாக இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் அமைந்தது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாளில் படத்தின் வசூல் ரூபாய் 27.20 கோடிகளை வசூல் செய்தது. இதன் மூலம் படம் முதல் மூன்று நாட்களில் ரூபாய் 53. 64 கோடிகளை வசூல் செய்தது என படக்குழுவே தெரிவித்தது. இதையடுத்து படத்தின் வசூல் குறித்து படக்குழு எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

100 கோடி: இந்நிலையில் இன்று அதாவது ஆகஸ்ட் 30ஆம் தேதி அதாவது படம் ரிலீஸ் ஆகி 16 நாட்களுக்குப் பின்னர் படம் ரூபாய் 100 கோடிகளை தியேட்டரில் மட்டும் வசூல் செய்துள்ளது. இதுமட்டுமில்லாமல் அடுத்தவாரம் ஹிந்தியில் ரிலீஸ் ஆகவுள்ளது. இங்கும் நல்ல வசூல் கிடைக்கும் என படக்குழு நம்புகின்றது. ஏற்கனவே படத்தின் ஓடிடி உரிமத்தை படக்குழு நல்ல விலைக்கு விற்று விட்டதால் தயாரிப்பாளரும் தங்கலான் ஒட்டுமொத்த குழுவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

தங்கலான் 2: அண்மையில் சென்னையில் நடைபெற்ற படத்தின் வெற்றி விழாவில் பேசிய விக்ரம், தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டு வருவதாக கூறினார். இது ரசிகர்களுக்கு ,மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











