Thangalaan Box Office: வசூல் ராஜாவாக மாறிய தங்கலான்.. மூன்றே நாளில் நிரம்பி வழியும் பாக்ஸ் ஆஃபீஸ்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். கோலார் தங்கவயலை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாகவும், பார்வதி மற்றும் மாளவிகா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பசுபதி, ஹரி, அர்ஜுன், டேனியல் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் நடித்துள்ளனர். மிகவும் அதிகப்படியான பொருட்ச் செலவில் உருவான இந்த படத்தினை ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ளது. தங்கலான் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இயக்குநர் பா. ரஞ்சித், இதுவரை அவர் இயக்க்கிய படங்களில் குறியீடாக தனது அரசியல் நிலைப்பாட்டினை கூறிவந்தவர், தங்கலான் படத்தில் நேரடியாகவே காட்சிகளை வைத்துள்ளார். குறிப்பாக, இந்தியா முழுவதும் பௌத்தத்தை நிறுவிய மாமன்னன் அசோகன் பெயர் கொண்ட கதாபாத்திரம் வெட்டி வீசப்பட்ட புத்தர் தலையை முதலில் எடுப்பது தொடங்கி துண்டாட்டப்பட்ட புத்தர் சிலையுடன் அதன் தலையை இணைப்பது என அனைத்து காட்சிகளும் நேரடி அரசியல் காட்சிகள்.

அம்பேத்கர் கூறியதைப் போல் இந்தியாவின் வரலாறு பார்ப்பனியத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையே உள்ள போர் எனக் கூறுவார். இந்த வார்த்தைகளை மிகவும் சரியாக காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குநர்.

வரலாற்றுப் பாடம்: ஜனரஞ்சகமான சினிமாவுக்கு என்ன தேவையோ அது இந்த சினிமாவில் இருந்தாலும், எந்த இடத்திலும் தனது கதை சொல்லும் நேர்த்தியில் சமர்சம் செய்து கொள்ளாத பா. ரஞ்சித் மற்றும் அவரது குழுவினருக்கும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு வரலாற்றை குறிப்பாக சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்களை பார்வையாளர்கள் மனதில் பதியும்படி ஒரு வரலாற்றுப் பாடம் எடுத்துள்ளார் ரஞ்சித்.

ஜாக்கெட்: ஜி.வி. பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்திற்காக பல்வேறு பழங்குடி இன மக்களின் இசையை தேடித்தேடி கோர்த்துக் கொடுத்துள்ளார். பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தின் மற்றொரு கதாநாயகன், பலம், தூண் என இசையைக் குறிப்பிடலாம். பார்வதியின் நடிப்பு என்பது மெச்சிக்கொண்டே இருக்கலாம் எனும் அளவிற்கு உள்ளது. குறிப்பாக விக்ரம் உடனான ரொமான்ஸ் காட்சியுலும் சரி, முதல் முறையாக ஜாக்கெட் அணியும் காட்சியிலும் சரி, பார்வதியின் முகபாவணகளுக்காக படத்தினை இன்னொருமுறை பார்க்கலாம்.

வசூல் விபரம்: படத்தின் இறுதிக் காட்சியின் முடிவு என்பது படத்தின் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டுள்ளது என விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் எதுவும் கூறவில்லை. படம் வெளியான நாளில் இருந்தே வசூலில் படம் பட்டையைக் கிளப்பி வருகின்றது.

படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 26.44 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. அதன் பின்னர் இரண்டாவது நாளில் படம் கிட்டத்தட்ட ரூபாய் 20 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. அதேபோல் மூன்றாவது நாளில், படம் கிட்டத்தட்ட ரூபாய் 20 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இதனால், படம் இதுவரை ரூபாய் 60 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது. இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











