இன்னும் இரு மாதங்களில் வெளியாகிறதா விக்ரமின் துருவ நட்சத்திரம்.. விரைவில் அறிவிப்பு!
சென்னை : நடிகர் விக்ரமின் கோப்ரா, பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகியுள்ளன.
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிப்பில் மிரட்டியிருந்தார் விக்ரம்.
இதனிடையே, நீண்ட நாட்களாக வெளியாகாமல் உள்ள விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் தேர்ந்தெடுத்த படங்களில் கவனமான கதைத்தேர்வுடன்தான் நடித்து வருகிறார். ஆனாலும் அவரது எதிர்பார்ப்புகளை மீறி சில படங்கள் சொதப்பத்தான் செய்கிறது. அந்த வகையில் அவரது கோப்ரா படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

கெட்டப்புகளுக்கு முக்கியத்துவம்
இந்தப் படத்தில் கெட்டப்புகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கதைக்கு கொடுக்க இயக்குநர் தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. படத்தின் பலமாக விக்ரமின் நடிப்பு மற்றும் ஏஆர் ரஹ்மானின் இசை பார்க்கப்பட்டது. முன்னதாக டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என அடுத்தடுத்த ஹிட் கொடுத்த அஜய் ஞானமுத்து இந்தப் படத்தில் சொதப்பலான திரைக்கதையை கொடுத்துள்ளார்.

ஆதித்த கரிகாலனாக விக்ரம்
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு விக்ரமின் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் ரிலீசாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கோப்ரா படம் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

கிடப்பில் போடப்பட்ட துருவ நட்சத்திரம்
இதனிடையே விக்ரம் -கௌதம் மேனன் காம்பினேஷனில் கடந்த 2018ல் துவங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இந்தப் படம் தூசித்தட்டப்பட்ட நிலையில் டிசம்பர் மாதத்திலேயே படத்தை முடித்து ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.

ரிலீஸ் செய்ய சரியான நேரம்
கௌதம் மேனன் இயக்கத்திலும் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்துள்ளது. இந்நிலையில் இந்த நேரத்தில் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடுவது அதன் வெற்றிக்கு காரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகச்சிறந்த எதிர்பார்ப்பு
முன்னதாக துருவ நட்சத்திரம் படத்திற்கு மிகச்சிறந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளானது. மேலும் விக்ரம் -கௌதம் மேனன் காம்பினேஷனும் படத்திற்கு மேலும் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், விக்ரம் -கௌதம் மேனன் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே இந்தப் படத்தின் சூட்டிங் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

டிசம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்
இதனிடையே, இந்த மனக்கசப்புகள் தீர்க்கப்பட்டு தற்போது மீண்டும் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. 90 சதவிகித காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் மீதமிருக்கும் காட்சிகளையும் எடுத்து ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. அப்படி டிசம்பரில் படம் வெளியானால், அடுத்தடுத்து திரையரங்குகளில் இந்த ஆண்டில் விக்ரமின் 3 படங்கள் வெளியாகியிருக்கும்.


Click it and Unblock the Notifications











