ஆண் குழந்தைக்கு அம்மாவானார் விக்ரம் பட ஹீரோயின்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து!
மும்பை: பிரபல ஹீரோயினுக்கு ஆண்குழந்தைப் பிறந்திருப்பதை அடுத்து ரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மனோஜ் ஹீரோவாக நடித்த, வருஷமெல்லாம் வசந்தம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், இந்தி நடிகை அனிதா ஹசானந்தனி.
அதற்கு முன் அனில் கபூர், ஐஸ்வர்யா ராய் நடித்த 'தால்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

இந்தி சீரியல்கள்
தமிழில், விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன், சரவண சக்தி இயக்கிய நாயகன், மகாராஜா உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி, கன்னடப் படங்களிலும் நடித்திருக்கும் அனிதா, இந்தி சீரியல்களில் பிறகு பிஸியானார்.

இன்ஸ்டாகிராம்
இவர் ரோகித் ரெட்டி என்பவரை காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நடிகை அனிதா கர்ப்பிணியாக இருந்தார். இதனை சில மாதங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். பின்னர் கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.

அழகான ஆண்குழந்தை
இந்நிலையில், மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்றுமுன் தினம் அழகான ஆண்குழந்தை பிறந்தது. இதை அவர் கணவர் ரோகித் ரெட்டி, தெரிவித்துள்ளார். அதோடு குழந்தை தனது விரலைப் பிடித்திருக்கும் புகைப்படத்தையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏக்தா கபூர்
இதையடுத்து நடிகை அனிதாவின் நெருங்கிய தோழியும் தயாரிப்பாளருமான ஏக்தா கபூர், மருத்துவமனைக்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஏராளமான திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் நடிகை அனிதா, அவர் கணவர் ரோகித் ரெட்டிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications