‘அதெப்படி எங்கள் போலீசை வில்லன் ஆக்கலாம்’... கடாரம் கொண்டானுக்கு தடை விதித்த மலேசியா!
கடாரம் கொண்டான் படத்திற்கு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: விக்ரமின் கடாரம் கொண்டான் திரைப்படத்துக்கு மலேசியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கடாரம் கொண்டான். கமல்ஹாசன் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை ராஜேஷ் ம செல்வா இயக்கியுள்ளார். கடாரம் கொண்டான் திரைப்படம் கடந்த 19ம் தேதி நாடு முழுவதும் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெளிநாடுகளிலும் இப்படம் வெளியாகியுள்ளது.
ஆனால் மலேசியாவில் மட்டும் கடாரம் கொண்டான் வெளியாகவில்லை.

மலேசிய கதைக்களம்:
இப்படம் முழுவதும் மலேசியாவில் தான் படம்பிடிக்கப்பட்டது. படத்தின் கதைகளமே மலேசியா தான். கதைப்படி மலேசியாவில் திருடனாக இருக்கும் விக்ரமை, வேறொரு வழக்கில் சிக்க வைக்க அந்நாட்டு காவல் துறை அதிகாரிகள் சிலர் முயற்சிப்பார்கள். அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பது தான் படம்.

சென்சார் மறுப்பு:
எனவே மலேசிய போலீசாரை தவறாக சித்தரித்திருப்பதாகக் கூறி அந்நாட்டு சென்சார் அதிகாரிகள், படத்துக்கு சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டனர். இதனால் மலேசியாவில் கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாகவில்லை. அங்குள்ள விக்ரம் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வெளிநாட்டு வியாபாரம்:
சினிமாவை பொறுத்தவரை, ஒரு படத்தின் வியாபாரத்தில் மிகவும் முக்கியமானது வெளிநாட்டு ரிலீஸ் உரிமை விற்பனை தான். அதுவும் மலேசியாவில் தமிழர்கள் அதிகம் என்பதால், தமிழ் படங்களுக்கு அதிக வியாபாரம் உண்டு. ஆனால் கடாரம் கொண்டான் படத்துக்கு மலேசியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அந்த வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் சாதனை:
உலகம் முழுவதும் வெளியான இப்படம் சென்னை சிட்டி ஃபாக்ஸ் ஆபிஸ் வசூலில் 3 நாட்கள் முடிவில் ரூ.1.75 கோடி குவித்து முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. தி லயன் கிங் 2ஆவது இடமும், ஆடை 3ஆவது இடமும், கூர்கா படம் 4ஆவது இடமும், சூப்பர் படம் 5ஆவது இடமும் பிடித்துள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு சென்னை சிட்டி ஃபாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்துள்ள விக்ரம் படம் என்ற பெருமையையும், கடாரம் கொண்டான் தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











