Thangalaan: ஜாதிய வன்மத்த வெச்சுக்கிட்டு என்ன செய்ய போறீங்க.. பிரபல இயக்குநர் பளார்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளாவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் இந்தியிலும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.
படம் குறித்த விமர்சனங்களில் மிகவும் முக்கியமானது, படம் பேசும் அரசியல்தான். நாகர்கள், பௌத்தம், பூர்வகுடி மக்கள் என கோலார் தங்கவயலை கதைக்களமாகக் கொண்டும், மாய எதார்த்த திரைக்கதையைக் கொண்டும் படத்தினை இயக்கியுள்ளார் பா. ரஞ்சித். இந்த காரணங்களுக்காவே படத்தினை ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக விக்ரம் போன்ற உலகம் போற்றும் நடிகரை மிகச் சரியாகப் பயன்படுத்தி அவருக்கும் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது மட்டும் இல்லாமல், தான் கூறவந்த கருத்தையும் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசை படத்திற்கு பெரிய பலம். குறிப்பாக, தங்கலானுக்காக பல்வேறு பழங்குடி இன மக்களின் இசையை தேடித்தேடி கோர்த்துக் கொடுத்துள்ளார். பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, ட்ரெண்ட்டிங்கில் உள்ளது. படத்தின் மற்றொரு கதாநாயகன், பலம், தூண் என இசையைக் குறிப்பிடலாம். பார்வதியின் நடிப்பு என்பது மெச்சிக்கொண்டே இருக்கலாம் எனும் அளவிற்கு உள்ளது. குறிப்பாக விக்ரம் உடனான ரொமான்ஸ் காட்சியிலும் சரி, முதல் முறையாக ஜாக்கெட் அணியும் காட்சியிலும் சரி, பார்வதியின் முகபாவனைகளுக்காக படத்தினை இன்னொருமுறை பார்க்கலாம் என பலர் கூறி வருகின்றனர்.

பேட்டி: படம் ரிலீஸ்க்கு முன்னரும், படத்தின் வெற்றிக்குப் பிறகும் படக்குழு தொடர்ந்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றது. குறிப்பாக இயக்குநர் பா. ரஞ்சித் பல முன்னணி ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில் பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

பிரச்னை: அந்தப் பேட்டியில், " படத்தில் லைவ் சவுண்ட் முறை பின்பற்றப்பட்டதால் அது சில தியேட்டர்களில் பிரச்னையாக மாறிவிட்டது. அதற்கு ஒரு காரணம் பல தியேட்டர்களில் முறையான ஆடியோ சிஸ்டம் இல்லாததுதான். நாங்கள் செக் செய்த தியேட்டரில் இந்த பிரச்னை இல்லை. சென்னையிலேயே சில தியேட்டரில் இதுபோன்ற பிரச்னை வந்தது எனக் கூறினார்கள். அதன் பின்னர்தான் இந்தப் பிரச்னையை தீர்க்க நாங்கள் முயற்சி செய்தோம்.
ஆடியோ சிஸ்டம்: பல தியேட்டரில் உள்ள ஆடியோ சிஸ்டம் என்பது இங்கு ரிலீஸ் ஆகும் பெரும்பான்மையான படங்களுக்கு சரியாக பொருந்திப் போகும் அளவிற்கு உள்ளது. தங்கலான் படத்திற்கு நாங்கள் அதனை மனதில் வைத்து வேலை செய்திருக்கவேண்டும் என தோன்றுகின்றது. மேலும் படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், படத்தின் விமர்சனமாக நீங்கள் கொடுக்கும் அன்பு, ஆதரவு மற்றும் வன்மம் ஆகியவற்றை நான் ஆற்றலாக மாற்றிக் கொள்கின்றேன் என பேசியது தொடர்பாக முன்வைக்கப்பட்ட கேள்விக்கு ரஞ்சித் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

வன்மம்: அதில், " வன்மத்த வெச்சுக்கிட்டு என்ன செய்யப்போறீங்க? வன்மத்தை கொட்டுபவர்களிடம் சண்டை போட முடியுமா? அல்லது அவர்களிடம் பேசுவதன் மூலம் என்ன நடக்கும் என நினைக்கின்றீர்கள். வன்மம் விதைப்பவர்களின் விருப்பமே, நம்மை வீழ்த்துவதுதானே. நான் வீழ்த்தபடவேண்டியவன் என விரும்புபவர்கள்தானே வன்மத்தைக் கொட்டுகின்றார்கள். நேர்மையான விமர்சனங்களை எதிர்கொள்வதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்தப் படைப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என நீங்கள் எழுதும் எழுத்து வாயிலாகவே என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியும். எல்லா படமும் எல்லாருக்கும் பிடிக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கின்றது. அந்த ரசனையின் அடிப்படையில் படம் பிடிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.
பேப்பர் கப்: படமே பார்க்காமல் படம் பிடிக்கவில்லை என்பதற்கும் படத்தை காலி செய்ய ஒரு இயக்கம் போல் செயல்பட்டது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இது யாரு எழுதறாங்க? இவங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் இருக்கு? எனக்கு இந்த சமூகத்தில் நடக்கும் பிரச்னையின் அடிப்படையில் நான் கேள்வி எழுப்பும்போது, நான் கேள்வியே கேட்கக்கூடாது என நிங்கள் நினைப்பது என்பது எவ்வளவு மோசமான எண்ணம் என்பதை இந்த நேரத்தில் கேட்கவேண்டிய தேவை இருக்கின்றது. படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் நான் முன்னர் பேசிய பேப்பர் கப் குறித்த செய்திகளை பரப்புகின்றனர். ஆனால் இன்றைக்கும் கிராமங்களுக்குச் சென்றால், அங்கு ஏன் பேப்பர் கப் பயன்படுத்துகின்றனர் என்பது புரியும்" என அந்தப் பேட்டியில் பேசியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











