Thangalaan: உலகமே வியக்கும்.. தங்கலான் ஆஸ்காருக்குச் சென்று இந்தியாவை பெருமைப்படுத்தும் - தனஞ்செயன்
சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 5ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.மேலும் படத்தின் புரோமோஷனுக்காக படக்குழு மெட்ரோ நகரங்களுக்கு பயணித்து வருகின்றது.
மெட்ரோ நகரங்களுக்குச் செல்லும் படக்குழு, அங்கு ரசிகர்களைச் சந்தித்து படம் குறித்தான பல சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்லி வருகின்றனர். மேலும் படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது எனவும் கூறி வருகின்றனர். தங்கலான் படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆகின்றது. இந்த படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தினை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும்.

தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் முன்னதாக பேட்டி ஒன்றில் மிகவும் சுவாரஸ்யாமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில், தங்கலான் படத்தினை தமிழ்நாடு, கேரளா, அந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் குறைந்தது 2000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதேபோல், படத்தினை வெளிநாடுகளில் மட்டும் 1000 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுமட்டும் இல்லாமல், இந்தியில் படத்தினை இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ரிலீஸ் செய்து கொள்ளலாம் என இருக்கின்றோம். அங்கு இருக்கும் விநியோகஸ்தர்கள் ஏற்கனவே ஆகஸ்ட் 15 தினத்தில் நான்கு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதால், தங்கலான் படத்தினை இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ரிலீஸ் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்கள்.

தள்ளிப்போகும் ஹிந்தி ரிலீஸ்: எனவே இந்தியில் மட்டும் ஆகஸ்ட் 15இல் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து ஒரு வாரம் கழித்தோ அல்லது இரண்டு வாரங்கள் கழித்தோ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே இதேபோல் காந்தாரா படம் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் செய்தது. அதேபோல் தங்கலான் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகின்றோம் என பேசியிருந்தார்.

ஆஸ்கார்: படத்தின் புரோமோசனுக்காக கோவைக்கு வந்திருந்த தங்கலான் படக்குழுவினர், செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் தரப்பில் இருந்து பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டது. அதில், தங்கலான் படம் ஆஸ்காருக்குச் செல்லுமா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் கூறுகையில், " நிச்சயம் படத்தினை ஆஸ்காருக்கு கொண்டு செல்லும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம். இந்த ஆண்டு ஃபிலிம் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்போகின்றார்கள். அந்த அறிவிப்பு வந்தவுடன் நாங்கள் தங்களான் படத்தை பரிந்துரைக்கு அனுப்பவுள்ளோம். அதன் பின்னர், ஃபிலிம் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா தங்கலான் படத்தினை ஆஸ்காருக்கு அனுப்பலாம் என முடிவு செய்தால் கட்டாயம் தங்கலான் படம் ஆஸ்காருக்குச் செல்லும்.

இந்தியாவின் பெருமை: ஃபிலிம் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா நிச்சயம் தங்கலான் படத்தினை தேர்வு செய்வார்கள் என நம்பிக்கையோடு இருக்கின்றோம். நான் விக்ரம் சாரிடம் கூட இது தொடர்பாக பேசிக்கொண்டு இருந்தேன். ஃபிலிம் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா டீமில் இருப்பவர்கள் படத்தின் ட்ரைலரைப் பார்த்துவிட்டு படம் கட்டாயாம் ஆஸ்காருக்கு பரிந்துரைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனக் கூறினார்கள். நாங்களும் மிகவும் ஆர்வமாக இருக்கின்றோம். தங்கலான் டீமிற்கு மிகவும் மகிழ்ச்சியாக அது அமையும். இந்தியாவை தங்கலான் பிரதிநிதிதுவப்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இந்திய சினிமாவிற்கே இந்த படம் பெருமையைத் தேடித்தரும். அப்படியான தங்கலான், ஆஸ்காருக்குச் செல்லும்போது உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்த்து இந்தியாவைப் பாராட்டுவார்கள்" என பேசினார்.



Click it and Unblock the Notifications











