என்னோட 17 வருஷ வலி..சினிமாவே வேண்டாம்னு நினைச்சேன்..விக்ராந்த் வேதனை!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், லால் சலாம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டுபேசிய நடிகர் விக்ராந்த், சினிமாவில் ஓர் அங்கீகாரம் கிடைக்காததால் சினிமாவைவிட்டு விலகிவிடலாம் என்று நினைத்தேன். அப்போது தான் லால்சலாம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று அந்த நிகழ்ச்சியில் பேசினார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மிகவும் அதிகமாக இருந்தது அதற்கு காரணம் இந்த படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு தான். ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படிப்பிடிப்பு மும்பை, புதுச்சேரி, திருவண்ணாமலை போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
தாமதமான டிரைலர்: இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், இப்படத்தின் சில பிரச்சனைகள் காரணமாக படம் வெளியாகவில்லை. இதையடுத்து படம் வரும் பிப்ரவரி 9ந் தேதி வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. முன்னதாக இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இரவு 9.30 மணிக்கு லால் சலாம் படத்தின் டிரைலர் வெளியானது. உணர்ச்சி பொங்க வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
நடிகர் விக்ராந்த் பேச்சு: இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விக்ராந்த், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ஐஸ்வர்யா அவர்களுக்கு நன்றி. நான் திரைத்துறைக்கு வந்து 16,17 வருடம் ஆகி விட்டது. இதுவரை எதுவும் சரியாக அமையவில்லை. எல்லாம் நன்றாக செய்தும் ஏனே மிஸ்ஸாகிக் கொண்டே இருந்தது. இதனால், சினிமாவை விட்டே விலகிடலாம்னு நினைத்தேன்.
கடவுள் கொடுத்த பரிசு: அப்போது தான் ஐஸ்வர்யா மேடமிடம் இருந்து அழைப்பு வந்தது. ஏதோ சின்ன ரோலாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், இந்த படத்தில் எனக்கு ஒரு முக்கியமான கேரக்டரை எனக்கு அவங்க கொடுத்து மிகவும் சந்தோஷமான விஷயம். இது கடவுள் எனக்கு கொடுத்த பரிசாக பார்க்கிறேன். நான் சினிமாவில் இருக்க வேண்டும் என்று கடவுள் நினைக்கிறார். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். விஷ்ணுவிஷால் கடினமான உழைப்பாளி. சினிமாவில் நிச்சயம் அவர் உயர்ந்த இடத்துக்கு வருவார்,வரணும் என்று விக்ராந்த் பேசினார்.


Click it and Unblock the Notifications











