வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த ரஜினி பட வில்லன்
Recommended Video

மும்பை: ரஜினி படத்தில் நடித்த வில்லன் நடிகர் தனது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1980கள், 90களில் பாலிவுட் படங்களில் வில்லனாக நடித்து வந்தவர் மகேஷ் ஆனந்த்(57). அமிதாப் பச்சன், சஞ்சய் தத், கோவிந்தா உள்ளிட்டோரின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
ரஜினிகாந்தின் வீரா படத்தில் வில்லனாக நடித்திருந்தார் மகேஷ்.

பிரிவு
மகேஷ் ஆனந்த் கடந்த 2000ம் ஆண்டு நடிகை உஷா பசானி என்கிற நடிகையை திருமணம் செய்தார். ஆனால் 2002ம் ஆண்டிலேயே அவர்கள் பிரிந்துவிட்டனர். இதையடுத்து மகேஷ் மும்பை அந்தேரி பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

மகேஷ்
மகேஷ் வீட்டில் வேலை செய்யும் பெண் சனிக்கிழமை காலை வந்து கதவை தட்டியபோது அவர் திறக்கவில்லை. இதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்த கதவை உடைத்து பார்த்தபோது மகேஷ் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். டிவி ஓடிக் கொண்டிருந்தது. அவரின் உடல் அருகே தட்டு, மது பாட்டில் இருந்தது.

மரணம்
மகேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகேஷ் இயற்கை மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தனிமையின் கொடுமையில் வாடி இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உஷா
மகேஷின் முன்னாள் மனைவி உஷா ரஷ்யாவில் வசித்து வருகிறார். அவருக்கு மகேஷின் மரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மகேஷ் செலவுக்கு பணம் இல்லாமல் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டுள்ளார். 18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடித்த ரங்கீலா ராஜா படம் கடந்த மாதம் 18ம் தேதி ரிலீஸானது. பல ஆண்டுகள் கழித்து படத்தில் நடித்ததை அவர் மகிழ்ச்சியுடன் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











