நடிகர்கள் கட்சி தொடங்குவதில் உடன்பாடில்லை..என்னை நான் நடிகனா நினைக்கல.. மன்சூர் அலிகான் பேட்டி!
சென்னை: நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை, என்னை நான் நடிகனாகவே நினைக்கவில்லை என்று இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். விஜய்யைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் கட்சித் தொடங்கி உள்ளது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்த நிலையில், நடிகர் விஜய் பிப்ரவரி 2ந் தேதி அரசியல் கட்சி தொடங்கினார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய்க்கு மக்கள் மத்தியிலும், அரசியல் பிரமுகர் மத்தியிலும் நல்ல ஆதரவு உள்ளது.

இந்திய ஜனநாயக புலிகள்: இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை, என்னை நான் நடிகனாகவே நான் நினைக்கவில்லை. ஏன் என்றால் 97ம் ஆண்டு தான் என் முதல் படம் வெளியானது. ஆனால், நான் 86ம் ஆண்டு நடைபெற்ற மனித சங்கலி போராட்டத்தில் கலந்து கொண்டேன். அதன் பிறகு காவேரி போராட்டம், தமிழ் ஈழப்போராட்டம் என பல போராட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறேன். நடிப்பு என்பதை நான் தொழிலாகத்தான் பார்க்கிறேன். இப்போது நாட்டில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். நான் ஒரு முடிவோடு தான் இறங்கி இருக்கிறேன்.
கட்சியின் முதல் மாநாடு: இதுவரை கட்சியில் 15 ஆயிரம் பேர் சேர்ந்து விட்டார்கள் உறுப்பினர்கள் போட்டு அதற்கான வேலை நடந்து கொண்டு இருக்கிறது. எங்களின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி இந்தியா முழுவதும் உரிமைக்காக போராடும் கட்சியாக இருக்கும். நான் இதற்கு முன்னர் தொடங்கிய கட்சிக்கு தமிழ் தேசிய புலிகள் என பெயரிட்டிருந்தேன். ஆனால் இந்தியா முழுவதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் அடைந்ததாகத் தெரியவில்லை. தமிழ் இனத்தில் முன்னேற்றமில்லை. ஒரு தமிழனை பிரதமராக்க முடியவில்லை. இது தொடர்பாக 24ஆம் தேதி பல்லாவரத்தில் மாநாடு நடைபெற் உள்ளது. வரும் மக்களவைத் தேர்தர்லில் கட்டாயம் போட்டியிடுவோம். ஆனால் எத்தனைத் தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் என இன்னும் முடிவு செய்யவில்லை.
முதலில் கல்யாணம்.. அப்புறம் முதலிரவு: தனியாக கட்சி தொடங்குவதற்கான நோக்கம் என்ன என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த மன்சூர் அலிகான், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் என்பதற்காக அவருடன் உடனே சேர்ந்து பயணிக்க முடியாது. முதலில் கல்யாணம் நடக்கட்டும்.. அப்புறம் முதலிரவு பற்றி பேசலாம் என்று அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











