விபத்தில் சிக்கிய இசையமைப்பாளர் மரணம்: கணவர், மகள் இறந்தது தெரியாமல் இருக்கும் மனைவி
திருவனந்தபுரம்: கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பாடகரும், வயலின் இசை கலைஞருமான பாலபாஸ்கர் மாரடைப்பால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பாலபாஸ்கர். வயலின் இசை கலைஞரான அவர் படங்கள், தொலைக்காட்சி தொடர்களுக்கும் இசையமைத்துள்ளார். 17 வயதில் அவர் மாங்கல்ய பல்லாக்கு என்ற படத்திற்கு இசையமைத்தார்.
12 வயதில் இருந்து மேடை கச்சேரிகளில் வயலின் வாசித்து வந்த அவர் குடும்பத்தோடு கடந்த 25ம் தேதி திருச்சூரில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கார் விபத்தில் சிக்கினார்.

குழந்தை
திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள பள்ளிபுரத்தில் வந்தபோது கார் மரத்தின் மீது மோதியதில் அதில் இருந்த பாலபாஸ்கர், அவரின் மனைவி லக்ஷ்மி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். டிரைவர் அர்ஜுனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பாலபாஸ்கரின் மகள் தேஜஸ்வினி உயிர் இழந்தார். பாலபாஸ்கருக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து பிறந்தவர் தேஜஸ்வினி.

சிகிச்சை
படுகாயம் அடைந்த பாலபாஸ்கர் மற்றும் லக்ஷ்மி திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 7 நாட்களாக உயிருக்கு போராடி வந்த பாலபாஸ்கருக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உயிர் இழந்தார். அவரின் மனைவி லக்ஷ்மிக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. குழந்தையும், கணவரும் இறந்த விஷயம் லக்ஷ்மிக்கு இன்னும் தெரியாது.

அறுவை சிகிச்சை
பாலபாஸ்கருக்கு தலை மற்றும் முதுகெலும்பில் படுகாயம் ஏற்பட்டது. பல அறுவை சிகிச்சைகள் செய்தார்கள். பல உறுப்புகள் செயல் இழந்தது. செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. உடலில் பல்வேறு இடங்களில் காயம் அடைந்துள்ள லக்ஷ்மிக்கும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவர் நிலைமை சீராக உள்ளது.
தூக்கம்
அதிகாலை நேரத்தில் டிரைவர் அர்ஜுன் தூங்கியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 12 வயதில் இசைப் பயணத்தை துவங்கிய பாலபாஸ்கர் 40 வயதில் மரணம் அடைந்துள்ளது மலையாள திரையுலகினரை கவலை அடைய வைத்துள்ளது. பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











