ViRosh: விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. சொத்து மதிப்பில் யார் டாப்? இருவரது சொத்தையும் சேர்த்தால் இவ்வளவா?
ஹைதராபாத்: திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது, ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் திருமணம் குறித்துதான். இவர்களின் திருமணம் பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. திருமண விழாவுக்கான ஏற்பாடுகளால் உதய்பூர் நகரம் இப்போதே களைகட்டி வருகிறது.
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் திருமணச் சடங்குகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. மஞ்சள் பூசுதல், மெஹந்தி வைபவம், சங்கீத் உள்ளிட்ட பாரம்பரியச் சடங்குகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இத்திருமண விழாவில் கலந்துகொள்ள பிரபலங்கள் உதய்பூருக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். நடிகை ஆஷிகா ரங்கநாத் ஏற்கனவே உதய்பூரில் காணப்பட்டார்.
கடந்த சில நாட்களாகவே விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் குறித்த செய்திகள் தான் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியும் இந்த நட்சத்திர ஜோடியின் திருமண விழாவில் கலந்துகொள்ள ஏற்கனவே உதய்பூர் வந்துள்ளார். நாளுக்கு நாள் இந்தத் திருமணத்தின் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

ரசிகர்கள் ஆர்வம்: இந்நிலையில், ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரிடமும் உள்ள சொத்து மதிப்பு எவ்வளவு? யார் அதிக பணக்காரர்? இருவரின் மொத்தச் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும்? என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்த முதல் திரைப்படமான 'கீதா கோவிந்தம்' ஒரு மெகா பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூபாய் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதன் பிறகு இவர்களின் சினிமா வாழ்க்கையே மாறியது.
தெலுங்கு, தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் ராஷ்மிகா கால் பதித்த பிறகு, அவரது மொத்த சொத்து மதிப்பு மேலும் அதிகரித்தது. போர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராஷ்மிகா மந்தனாவின் மொத்தச் சொத்து மதிப்பு ரூபாய் 66 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் கிடைத்த சம்பளமாகும்.
ராஷ்மிகா சொத்து மதிப்பு: தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா, ஒரு படத்திற்கு ரூபாய் 4 கோடி முதல் ரூபாய் 8 கோடி வரை பெறுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த 'புஷ்பா 2' படத்திற்காக ராஷ்மிகா மந்தனா ரூபாய் 10 கோடி சம்பளமாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள் தவிர, கல்யாண் ஜூவல்லர்ஸ், 7 அப், மீஷோ உள்ளிட்ட பல விளம்பரப் படங்களிலும் நடித்து வருவாயை ஈட்டுகிறார். ஹைதராபாத், பெங்களூரு மற்றும் குடகுவில் ராஷ்மிகாவுக்கு சொந்தமான சொத்துகள் உள்ளன. மேலும், ஆடி 3, ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் போன்ற விலையுயர்ந்த கார்களை அவர் வைத்திருப்பதாக லைவ் மிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா சொத்து மதிப்பு: விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவுக்கு சளைத்தவர் அல்ல. லைஃப்ஸ்டைல் ஆசியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, விஜய் தேவரகொண்டாவிடம் ரூபாய் 66 கோடி முதல் ரூபாய் 70 கோடி வரை சொத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு திரைப்படத்திற்கு ரூபாய் 12 கோடி முதல் ரூபாய் 15 கோடி வரை அவர் சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது. இவரிடத்திலும் விலை உயர்ந்த கார்கள், சொகுசு பங்களாக்கள் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் பிரைவேட் ஜெட் ஒன்றும் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மொத்த சொத்து: மேலும், விஜய் தேவரகொண்டா 'ரவுடி' என்ற பெயரில் தனது சொந்த பிராண்டையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 8 கோடி வருவாய் ஈட்டுகிறார். ஒரு பிராண்ட் விளம்பரத்திற்கு ரூபாய் ஒரு கோடி முதல் ரூபாய் 2 கோடி வரையிலும், ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூபாய் 40 லட்சம் வரையிலும் இவர் வசூலிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆகவே, ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் சமமான சொத்து மதிப்பை பெற்றுள்ளனர். லைவ் மிண்ட் அறிக்கையின்படி, இவர்களின் மொத்தச் சொத்து மதிப்பைச் சேர்த்தால்ரூபாய் 132 கோடி முதல் ரூபாய் 136 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications