ஆஸ்கர் விருதுக்குத் தேர்வாகாத விசாரணை!
இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வு செய்து அனுப்பப்பட்ட விசாரணை படம், போட்டியிலிருந்து வெளியேறியது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை திரைப்படம் கோவை ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய 'லாக்கப்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டது.
விமர்சகர்கள் மற்றும் திரையுலகினரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற இந்தப் படத்துக்கு சர்வதேச விருதுகள், தேசிய விருதுகள் என பெரிய அங்கீகாரம் கிடைத்தது. வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் இத்திரைப்படம் பெற்றது.
இந்நிலையில் இன்னொரு சிறப்பை பெறும் வகையில் ஆஸ்கர் விருதுக்கு இந்திய அரசின் சார்பில் இத்திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடக்கவுள்ள 89-ஆவது ஆஸ்கரில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படப் பிரிவில் இப்படம் போட்டியிட்டது. இந்திய மொழிகளில் வெளியான 29 படங்கள் அடங்கிய பட்டியலில் இருந்து விசாரணை படம் மட்டுமே இறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விசாரணை படம் தற்போது ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான 9 படங்கள் அடங்கிய முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விசாரணை படம் இடம்பெறவில்லை. இந்த 9 படங்களில் இருந்து 5 படங்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகும்.


Click it and Unblock the Notifications











