'சக மனிதனாக கடும் கோபத்தில் இருக்கிறேன்' - கொந்தளித்த விஷால்!
சென்னை : நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் ஆளுநருக்கு ஆதரவளிக்கும் விதமாக பெண் பத்திரிக்கையாளர்களைப் பற்றி கொச்சையாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் எஸ்.வி.சேகர் மீது சட்டப்படி வழக்கு போடப்படும் எனக் கூறினார். எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் சைபர் சைக்கோக்கள் என்றும் விமர்சித்தார்.

நேற்று, பாஜக-வின் கமலாலயம் அலுவலகத்தின் முன்பு பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். பிறகு எஸ்.வி.சேகர் வீட்டின் முன்பு பத்திரிகையாளர்கள் கல்லெறிந்து போராட்டம் நடத்தினர். எஸ்.வி.சேகர் இந்தப் பிரச்னைக்கு மன்னிப்பு கேட்டு, வாசித்துப் பார்க்காமல் பகிர்ந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மீடியா துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்தில் பெரியார் கண்ட கனவு நினைவாகி வரும் நேரத்தில் மீடியாவில் பணிபுரியும் சகோதரிகளை களங்கப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பிய எஸ்.வி.சேகரின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
பத்திரிக்கை துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர், அவர்களின் மனது இந்த அவதூறால் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை உணர்வேன், ஒரு நடிகனாக இல்லாமல் சக நண்பனாக கடும் கோபத்துக்கு உள்ளாகி இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார் விஷால்.


Click it and Unblock the Notifications











