Bhavatharini - ஜீரணிக்கவே முடியல.. நிம்மதியாக ஓய்வெடு பவதாரிணி.. உச்சக்கட்ட சோகத்தில் விஷால்
சென்னை: பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் இலங்கைக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஷாலும் உச்சக்கட்ட சோகத்தில் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.
பிரபுதேவா, ரோஜா நடித்து இளையராஜா இசையமைத்த ராசய்யா படத்தில் இடம்பெற்ற காதல் வானிலே காதல் வானிலே பாடலை பாடி பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்தப் பாடலுக்கு பிறகு காதலுக்கு மரியாதை, அலெக்ஸாண்டர், தேடினேன் வந்தது, டைம், அழகி, பாரதி,உல்லாசம், கோவா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார். இவற்றில் பாரதி படத்தில் இடம்பெற்ற மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்கு தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.

கடைசி பாடல்: பெரும்பாலும் இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் இசையில் பாடிய பவதாரிணி தேவா, சிற்பி, ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக அனேகன் படத்தில் இடம்பெற்ற 'ஆத்தாடி ஆத்தாடி' பாடலை பாடியிருந்தார் அவர். அதன் பிறகு பாடுவதை நிறுத்திவிட்டார்.
பித்தப்பை புற்றுநோய்: இதற்கிடையே பாடகியாக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் பத்து படங்களுக்கு பணியாற்றியிருந்தார். மேலும் சில படங்களுக்கு இசையமைக்கவும் அவர் ஒத்துக்கொண்டிருந்த சூழலில் அவருக்கு பித்தப்பை புற்றுநோய் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த சில காலமாகவே சிகிச்சை எடுத்து வந்தார் அவர். ஆனால் இங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஒத்து வராததால் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக கடந்த மாதம் சென்றார்.
உயிரிழப்பு: அங்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் இன்று இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளின் உயிரிழப்பை தெரிந்துகொண்ட இளையராஜா கனத்த இதயத்துடன்; பவதாரிணி உடல் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் இருக்கிறார். மனைவியையும் இழந்து தற்போது மகளையும் இழந்திருக்கும் அவருக்கு பலரும் தங்களது ஆறுதலை சொல்லிவருகிறார்கள்.

விஷால் இரங்கல்: பவதாரிணியின் உடல் இன்று இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது. பிறகு இறுதிச்சடங்கு நடைபெறும். இந்த சூழலில் அவரது உயிரிழப்புக்கு விஷால் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்புள்ள பவதா (பவதாரிணி). இதை ஜீரணிக்க முடியாமல் கனத்த இதயத்துடன் நான் எழுதுகிறேன். இனி நீ எங்களுடன் இருக்கப்போவதில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன்.
மிஸ் செய்கிறேன்: இளையராஜாவின் மகளாகவோ, யுவனின் சகோதரியாகவோ, வாசுகியின் உறவினராகவே உன்னை நான் அறிந்ததைவிடவும்; உடன் பிறந்த சகோதரியாகவே நினைக்கிறேன். அப்படித்தான் நான் உன்னை மிஸ் செய்கிறேன். ஒரு நல்ல உள்ளம் எங்களை விட்டு பிரிந்து செல்கிறது. கடந்த சில வாரங்களாகவே நான் விரும்பும் நபர்களை ஏன் இழக்கிறேன் என்று தெரியவில்லை. கண்டிப்பாக நீ நினைவுகூரப்பட்டுக்கொண்டே இருப்பாய். உனது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உன் இழப்பை சமாளிக்கும் சக்தி அவர்களுக்கு கிடைக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











