தமிழ் ராக்கர்ஸை முடக்குங்க சார்: சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஷால் மனு
சென்னை: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்கக் கோரி நடிகர் விஷால் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார்.
பல கோடி செலவில் எடுக்கப்பட்ட பாகுபலி 2 படம் தமிழகத்தில் தியேட்டர்களில் ரிலீஸாகும் முன்பு இணையதளங்களில் வெளியானது. சில மணிநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் படத்தை டவுன்லோடு செய்தனர்.
தமிழகத்தில் காலை காட்சி ரத்தான நிலையில் படம் இணையதளத்தில் வெளியானது.

புகார்
படம் இணையதளத்தில் வெளியானது குறித்து பாகுபலி 2 படக்குழு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்கக் கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

இன்டர்நெட் மாபியா
பல கோடிகள் செலவில் 4 ஆண்டுகள் உழைப்புக்கு பிறகு வெளியான பாகுபலி 2 படம் தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் உள்ள இணையதளத்தில் இன்டர்நெட் மாபியாக்களால் அப்லோடு செய்யப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் ராக்கர்ஸ்
தமிழ் ராக்கர்ஸ் பெயரில் பல இணையதளங்களில் பாகுபலி 2 படம் வெளியானதால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகுபலி 2 குழுவிடம் இருந்து எங்களுக்கு புகார் கிடைத்துள்ளது.

நடவடிக்கை
சட்டவிரோதமாக பாகுபலி 2 படத்தை டவுன்லோடு செய்ய அனுமதிக்கும் பல இணையதளங்களை எங்கள் முயற்சியில் கண்டுபிடித்துள்ளோம்.
இந்த விவகாரம் குறித்து விசாரித்து அந்த சட்டவிரோத இணையதளங்களை முடக்கி, கயவர்களை கண்டுபிடித்து நீதிக்கு முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என விஷால் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











