கொல்லங்குடி கருப்பாயிக்கு விஷால் நிதி உதவி.. .நடிகர் சங்கத்தில் சேர்க்கவும் உறுதி!
ஆண்பாவம் படம் பார்த்தவர்கள் கொல்லங்குடி கருப்பாயியை அத்தனை சுலபத்தில் மறந்திருக்க மாட்டார்கள்.
விகே ராமசாமிக்கு அம்மாவாக, பாண்டியராஜனுக்கு பாட்டியாக வந்து நாட்டுப்புறப் பாடல்கள் பாடி அசத்திய அபார கலைஞர். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர், அப்புறம் என்ன ஆனார் என்பதே தெரியாமல் போனது.

இப்போது 80 வயதாகும் கொல்லங்குடி கருப்பாயியைத் தேடிப் பிடித்து உதவி செய்துள்ளார் விஷால்.
மதுரை-தொண்டி சாலை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவரை 1985-ல் இயக்குநர் பாண்டியராஜன் ‘ஆண் பாவம்' படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்படத்தில் இளையராஜாவின் இசையில் இவர் பாடிய பாடல் புகழ்பெற்றது. 1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கினார்.

சினிமா மூலம் நாட்டுப்புறப் பாடல்களைப் பட்டிதொட்டியெங்கும் பரவச் செய்த நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயிக்கு இப்போது 80 வயது. அரசு வழங்கும் நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500-ல் வாழ்க்கை நடத்தி வறுமையில் வாடிக்கொண்டு இருக்கிறேன் என்றும் மருத்துவச் செலவுக்கும், நல்லது கெட்டதுக்கும் ரொம்பவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றேன், பல சினிமா படங்களில் நடித்தும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகக் கூட சேர்க்காமல் கைவிடப்பட்டேன் என்றும் அவர் வருந்தியது சமீபத்தில் ஒரு நாளிதழில் செய்தியாக வந்திருந்தது.

அதைப் படித்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், உடனே சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் உள்ள நாட்டுப்புறப் பாடகி கருப்பாயிக்கு உதவித் தொகை வழங்கினர்.
அது மட்டுமின்றி, ஒரு வாரத்திற்குள் நடிகர் சங்கத்தில் கருப்பாயியை உறுப்பினர் ஆக்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











