நடிகர் விஷால் அலுவலகத்தில் 45 லட்சம் ரூபாய் கையாடல்.. பெண் ஊழியர் மீது போலீஸில் புகார்!
சென்னை: நடிகர் விஷாலின் அலுவலகத்தில் 45 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்யததாக பெண் ஊழியர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ளார்.
விஷால் ஃபிலிம் பேக்ட்ரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் விஷால். இந்த நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்துள்ளார் விஷால்.

45 லட்சம் கையாடல்
விஷாலின் இந்த அலுவலகம் சென்னை வடபழனி குமரன் காலனியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் விஷாலின் மேனேஜரான ஹரி, வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில் தங்களின் அலுவலகத்தில் 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவர் 45 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக கூறியிருக்கிறார்.

சொந்த வீடு
மேலும் தங்களிடம் கையாடல் செய்த பணத்தில் சொந்தமாக வீடு வாங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆவணங்களை சரிபார்த்த போது அந்தப் பெண், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்துள்ளது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தை மீட்டுத்தர வேண்டும்
மேலும் தங்களின் நிறுவனத்தில் இருந்து கோடிக்கணக்கில் கையாடல் செய்திருக்கலாம் என்றும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் விஷாலின் மேனேஜரான ஹரி தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி தங்களின் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் புகாரில் கூறியுள்ளார்.

கோலிவுட்டில் பரபரப்பு
நடிகர் விஷாலின் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணே 45 லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஷால் தற்போது, துப்பறிவாளன் 2, சக்ரா ஆகிய படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











