அதிரடி நடவடிக்கைகளால் ஆச்சரியப்படவைத்த விஷால்!
Recommended Video

சென்னை : தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் அதிரடி நடவடிக்கைகளால் தமிழ் சினிமாவில் சில விரும்பத்தகுந்த மாற்றங்கள் நிகழ இருக்கின்றன.
தொடர்ந்து ஒன்றரை மாதம் ஸ்ட்ரைக் நடத்தி, தீர்வு ஏற்பட்டால்தான் இந்தப் பிரச்னையை விட்டு நகருவேன் என திடமாக நின்று தற்போது உடன்பாடு எட்டப்பட காரணமாகி இருக்கிறார்.
அவரது நடவடிக்கைகளையும், அதிரடி பேச்சுகளையும் முன்பு விமர்சித்த பலரும் கூட தற்போது நடைபெற்ற முயற்சிகளுக்காகவும், மாற்றங்களுக்காகவும் விஷாலைப் பாராட்டி வருகின்றனர்.

அதிரடி நடவடிக்கைகள்
விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவற்றில் இந்த 48 நாள் ஸ்ட்ரைக்கும், அதில் எட்டப்பட்டிருக்கும் முடிவுகளும் திரையுலகில் மிக முக்கியமான செயல்பாடுகள். இதன் மூலம், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் நிறைய நன்மைகள் ஏற்படவிருக்கின்றன.

ஸ்ட்ரைக்
பல தரப்புகள் இருக்கும் சினிமா துறையினரை ஒருங்கிணைத்து ஒரு நீண்ட ஸ்ட்ரைக் நடத்துவதென்பது சாதாரண காரியமல்ல. பெரிய தயாரிப்பாளர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களுக்குச் சாதகமான முடிவுகளை எடுத்துக் கொள்ள நினைப்பார்கள். சில படங்கள் சிறப்பு அனுமதி பெற்று ஷூட்டிங் நடத்தப்பட்டதே திரையுலகினருக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது.

கணினிமயமாகும் டிக்கெட் விற்பனை
கணினிமயமாக்கப்பட்ட வெளிப்படைத் தன்மையுடன் கூடிய டிக்கெட் விற்பனை என்பது திரையுலகில் இருக்கும் பலவருடக் கோரிக்கை. இது சாத்தியமா என பலரும் யோசித்த வேளையில் இதோ வரும் ஜூன் 1 முதல் இதை செயல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார் விஷால். இதன்மூலம் உண்மையில் தியேட்டரில் வெற்றிபெறும் படங்கள் எவை என்பது அனைவருக்கும் தெரியவரும்.

சிறு பட்ஜெட் படங்கள்
முழுமையாக கணினிமயமாக்குவதன் மூலம் பண்டிகை நாட்களில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவது தடுக்கப்படும். மேலும், படங்களின் பட்ட்ஜெட்டுக்கு ஏற்ப டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் திட்டமும் வரவிருக்கிறது. இதனால், சிறு பட்ஜெட் படங்களுக்கும் ரசிகர்களின் வரவேற்பு கிடைக்கும்.

கட்டணத்தை குறைத்த க்யூப்
முரண்டு பிடித்துக்கொண்டிருந்த க்யூப் நிறுவனத்தின் ஆதிக்கத்தை தடுப்பதற்காக புதிய நிறுவனங்களுடன் துணிந்து ஒப்பந்தம் போட்டது தயாரிப்பாளர் சங்கம். இந்த அதிரடியே, க்யூப் நிறுவனம் ஒரு காட்சிக்கு ரூ. 250, வாரத்துக்கு ரூ. 5000, முழு ரன்னிங்குக்கு ரூ. 10000 என்கிற கட்டண முறையை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம்.

பலரும் பாராட்டு
விஷால் முன்னெடுப்பில் நடத்தப்பட்ட இந்த ஸ்ட்ரைக் வெற்றிபெற்று தயாரிப்பாளர் சங்கத்தின் பல கோரிக்கைகள் நிறைவேறியுள்ளன. க்யூப் கட்டண உயர்வுக்கு எதிராக மட்டும் அல்லாது, ஆன்லைன் டிக்கெட் புக்கிங் கட்டணம் இல்லாமல் புக் செய்ய புதிய வெப்சைட் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவித்திருப்பது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த்
நடிகர் சங்கத்தின் கடனை அடைத்த விஜயகாந்த் சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுகிறார். தற்போது, விஷால் மேற்கொண்ட பணிகள் அவரையும் சிறந்த நிர்வாகியாக உருவாக்கியுள்ளது. இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வெற்றியடைந்தால் விஷாலின் சாதனைகளில் இவை மிக முக்கியமானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











