வேறு எந்த தயாரிப்பாளரும் இரையாகக்கூடாது.. பெயரை குறிப்பிடாமல் பிரபல இயக்குநரை கடுமையாக சாடிய விஷால்!
சென்னை: வேறு எந்த தயாரிப்பாளர்களும் இரையாகிவிடக் கூடாது என்று இயக்குநர் மிஷ்கினை மறைமுகமாக சாடி நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படம் பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை துப்பறிவாளன் 2 என நடிகர் விஷாலின் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்தது.
இதில் நடிகர் விஷாலுடன் பிரசன்னா, கெளதமி, ரகுமான், அஷ்யா உள்ளிட்டோர் நடித்தனர். லண்டனில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

நிபந்தனைகள்
படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தில் இருந்து இயக்குநர் மிஷ்கின் திடீரென நீக்கப்பட்டார். இந்த விவகாரம் தமிழ் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஷாலுக்கு மிஷ்கின் விதித்த 15 நிபந்தனைகள் கொண்ட கடிதமும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இயக்குநராக
இந்நிலையில் நடிகர் விஷால் இயக்குநர் மிஷ்கினை சாடி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது, ''இயக்குநராக அறிமுகமாக மக்களின் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராகச் சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன். இன்று மாலை படத்தின் முதல் பார்வையை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

வெளிநாட்டில் கதை எழுதி
கனடா மற்றும் இங்கிலாந்தில் கதை எழுத விரும்பிய ஒரு இயக்குநர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்ச ரூபாய் செலவழித்து, அதற்கும் மேலாகப் பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தைத் தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் 13 கோடி ரூபாய் பணத்தைச் செலவழித்த பின்னர், படத்தை விட்டு ஒரு இயக்குநர் விலகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

சுட்டிக்காட்டினால் தவறா?
ஒரு இயக்குநர் ஒரு திரைப்படத்திலிருந்து விலகுவது ஏன்? ஒரு தயாரிப்பாளராக எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. படத்தை முடிக்க என்னிடம் பணம் இல்லை என்பதாலா? இல்லை.
படத்தின் தயாரிப்பின்போது, ஒரு இயக்குநரின் தவறுகளை ஒரு தயாரிப்பாளர் சுட்டிக் காட்டினால் அது தவறா? இங்கிலாந்தில் 3 முதல் 4 மணிநேரப் படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டபோது, படத்தின் முன்னேற்றத்திற்காக சுட்டிக்காட்டிய விஷயங்களா? இல்லை.

அநாதையாக விடுவது போல
ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டும் ஷூட் செய்வதற்குப் பதில், செலவைக் குறைக்க, இரவு பகலாக ஷூட் செய்யலாமா என்று கேட்டால் அது தவறா? இல்லை. நான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன், ஏனென்றால், நீங்கள் உங்கள் சொந்த குழந்தையை அநாதை இல்லத்தில் கைவிடுவது போல மோசமாக இருக்கிறது.

இயக்குநருக்கு சரியா?
இப்படியான தவறான செயல்களுக்குப் பிறகு, இந்தப் படத்தில் நான் இல்லை என்று கூறிய பிறகு, டிசம்பர் 11, 2019 அன்று படப்பிடிப்பை நிறைவு செய்யாமல், ஜனவரி 4, 2020 அன்று இந்தியாவுக்குத் திரும்பி, 2020 பிப்ரவரி முதல் வாரத்தில் விஷால் பிலிம் ஃபேக்டரி அலுவலகத்திற்கு வருவது ஒரு இயக்குநருக்குச் சரியானதா?

அனுபவிக்கக்கூடாது
திரைப்படத் தயாரிப்பின் போது ஏற்படும் ஆர்வத்தையும் தயாரிப்பின் போது ஏற்படும் ஆர்வத்தையும் தயாரிப்பாளர் சந்திக்கும் கஷ்டங்களையும் இயக்குநர் அறிந்திருக்கிறாரா?
நான் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஒரே காரணம் என்னவென்றால், புதுமுகத் தயாரிப்பாளரோ, அறிமுகத் தயாரிப்பாளரோ, எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் சரி அவர்கள் ஷூட்டிங்கின் போது நான் பட்ட கஷ்டங்களையோ அல்லது ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் படும் கஷ்டங்களையோ அனுபவிக்கக் கூடாது என்பதற்காகத்தான்.

நானே இயக்குகிறேன்
மிக முக்கியமாக, எந்தவொரு தயாரிப்பாளரும் இத்தகைய சோதனையைச் சந்திக்கக்கூடாது. நல்ல வேலையாக, திரைப்பட தயாரிப்பின் நுணுக்கங்களை அறிந்த பின்பு, இந்தப் படத்தைக் கைவிட வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால், முன்னோக்கிச் சென்று இப்படத்தை நானே இயக்கி, என்னுடைய சிறப்பான பணிகளைச் செய்து, படத்தை வெளியிட்டு, இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் எட்டும் என்பதையும் உறுதி செய்கிறேன்.

இரையாகக்கூடாது
இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரைக் கெடுப்பது அல்ல. ஆனால் இதுபோன்ற நபர்களுக்கு, வேறு எந்த தயாரிப்பாளர்களும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே. இது ஒரு பொதுக் கூக்குரலாக இருக்கலாம். ஆனால், அனைத்து தயாரிப்பாளர்களும் (புதிய மற்றும் பழைய தயாரிப்பாளர்கள்) விஷால் ஃபிலிம் ஃபேக்டரி (வி.எஃப்.எஃப்) போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு 'துப்பறிவாளன்-2' படப்பிடிப்பின்போது என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காகவே என்று நினைக்கிறேன்.

சிறந்ததை செய்ய..
இயக்குநராக அறிமுகமாக உங்கள் ஆசிர்வாதங்களையும் வாழ்த்துகளையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராகச் சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன். இன்று மாலை 6 மணிக்கு படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. கடவுளின் ஆசிர்வாதம்..!' இவ்வாறு நடிகர் விஷால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











