சினிமாவுக்கு நல வாரியம் - கோரிக்கையை ஏற்ற அமைச்சருக்கு நன்றி தெரிவித்த விஷால்
சென்னை : தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் திரைத்துறையினரின் நெடுநாள் கோரிக்கையாக இருந்து வருவது தமிழ் சினிமாத்துறையினருக்கு நல வாரியம் அமைக்கவேண்டும் என்பது. இந்நிலையில், தேவைப்பட்டால் திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் எனக் கூறிய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.
மார்ச் 1-ம் தேதி முதல் டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக வேலை நிறுத்தத்தை நடத்தி வருகிறார்கள் திரைத்துறையினர். பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தினர் தொடர்ந்து ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து வரும் புதன்கிழமை திரைத்துறையினர் பேரணியாக சென்று முதல்வரிடம் கோரிக்கை மனுவை அளிப்போம் என விஷால் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தயாரிப்பாளர் சங்கப் பிரச்னை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. திரைத்துறை பிரச்னையை தீர்க்க தேவைப்பட்டால் தனி வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.
இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நன்றி தெரிவித்த விஷால், திரைத்துறை சம்மந்தப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். திரைத்துறையினருக்கு அரசின் இந்த முடிவு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











