திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்... விலகினார் நடிகர் விஷால்? களத்தில் இறங்கிய 2 அணிகள்!
சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் இந்த முறை போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது.
Recommended Video
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம்.
இந்தத் தேர்தலை ஜூன் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி
அனேகமாக, மே முதல் வாரம் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதையடுத்து தலைவர், இரண்டு செயலாளர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், பொருளாளர் அடங்கிய நிர்வாகிகள் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்தல் அதிகாரியாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

2 அணிகள்
தேர்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சில தயாரிப்பாளர்கள் அணிகளை உருவாக்கும் பணியில் பிசியாக ஈடுபட்டுள்ளனர். தற்போது தயாரிப்பாளர்கள், அம்மா கிரியேஷன்ஸ், டி.சிவா, ராம நாராயணனின் மகன், முரளி ஆகிய இருவர் தலைமையிலான அணிகள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. வேறு அணிகள் இதுவரை போட்டியில் இல்லை.

மைக்கேல் ராயப்பன்
இந்த தேர்தலில், தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி சார்பில் என்.ராமசாமி என்கிற முரளி, தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ராமநாராயணனின் மகன். இவர் அணியில், செயலாளர்கள் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன், கே.ஜே.ஆர்.ராஜேஷ் ஆகியோரும், துணைத் தலைவர்கள் பதவிக்கு சுபாஷ் சந்திரபோஸ், மைக்கேல் ராயப்பன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயினும் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 21 பேர் போட்டியிடுகிறார்கள்.

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா
'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி' சார்பில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். பொருளாளராக முரளிதரன், செயலாளர்களாக பி.எல். தேனப்பன், ஜே.சதீஷ்குமார், துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், தனஞ்ஜெயன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். கே.ராஜன், ராதாரவி, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், சித்ரா லட்சுமணன் உட்பட 21 பேர் செயற்குழு பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

விஷால் அணி
நடிகர் விஷால் தலைமையிலான் அணி இந்த தேர்தலில் போட்டியிட வில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்த தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஜே.எஸ்.ஜே.சதீஷ்குமார் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. 60-வயது கடந்தவர்கள் 2 வார காலத்திற்கு வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வேறு தேதியில் தேர்தல்
சங்க உறுப்பினர்களில் பல பேர் 60 வயதைக் கடந்த மூத்த உறுப்பினர்களாக உள்ளார்கள். அவர்களால் சங்கத்திற்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் கொரோனா அச்சுறுத்தல் முழுவதும் நீங்கிய பிறகு புதிய தேதி அறிவித்து தேர்தல் வேலைகளைத் தொடங்க கேட்டுக் கொள்கிறேன்' இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











