இயக்குநர்கள் சங்கத் தேர்தல்… விக்ரமன் மீது குற்றம் சாட்டும் விசு… மோதல் தொடங்கியது
சென்னை: பிரபல இயக்குநர்களின் பெயரைப் பயன்படுத்தி முறைகேடு செய்வதாக இயக்குநர் விக்ரமன் மீது இயக்குநர் விசு குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான தலைவர்,பொது செயலாளர்,பொருளாளர்.,துணைத்தலைவர்கள்,மற்றும் இணைச்செயலாளர்களுக்கான தேர்தல் வருகின்ற ஜூன் 9 ம் தேதி சென்னையில் நடை பெறுகிறது.
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு இப்போது தலைவராக பாரதிராஜாவும், செயலாளராக அமீரும் பதவி வகிக்கிறார்கள். இவர்கள் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 21 பதவிக்கான தேர்தல் நடக்கவுள்ளது. கிட்டத்தட்ட 2700 உறுப்பினர்களை கொண்ட இயக்குநர் சங்கத்தில் 1518 பேருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது.

விசு – விக்ரமன் மோதல்
இதில் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் விசு மற்றும் விக்ரமன் போட்டியிடுகின்றனர்.அதே போல் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி மற்றும் ஆர்.சுந்தர்ராஜன் பொதுச்செயலாலருக்கு போட்டியிடுகின்றனர்.
விசு அணியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது விசு பேசியதாவது: ‘இயக்குனர் விக்ரமனை நான் மதிக்கிறேன். அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். ஏற்கனவே ஆர்.கே.செல்வமணி பொறுப்பில் இருக்கும்போது பலமுறைகேடுகள் நடைபெற்றதாக கூறிய விக்ரமனே இப்போது அவர்கள் பக்கம் நிற்பது ஏன்? இந்த கேள்விக்கு இதுவரை விக்ரமன் பதில் அளிக்கவில்லை.
அதோடு, அவர்கள் தரப்பில் ஒரு நோட்டீஸ் போட்டிருக்கிறார்கள். அதில் படைப்பாளிகள் சங்கத்தின் போர் வீரர்கள் என அச்சிட்டு ஒருபக்கம் பாலச்சந்தர், இன்னொரு பக்கம் பாரதிராஜா படத்தை போட்டிருக்கிறார்கள். அப்ப அவங்க இரண்டு பேரும் விக்ரமன் அணியை ஆதரிக்கிறார்களா? அந்த நோட்டீசை பார்த்ததும் எங்க அணியில் இருந்தவர்கள் எல்லாரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். பாலச்சந்தர்,பாரதிராஜா போன்றோரின் அனுமதியின்றி,அவர்களது புகைப்படங்களை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கிறார்.

திடீர் மாப்பிள்ளை
நான் பெரும்பாலும் இதுமாதிரி விஷயங்களில் தலையிடுவதில்லை. தேர்தல்ல நிக்கனும்னு நான் விரும்பவில்லை. முதல்ல தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்த ஆர்.வி.உதயகுமாரை வாழ்த்தத்தான் நான் போனேன். அங்க போனா என்னை பொருளாளர் பதவிக்கு நிக்கச் சொல்லிட்டாரு. டம்மி வேட்பாளாரா நாங்க செய்த மனுக்களை மட்டும் ஏத்துகிட்ட தேர்தல் அதிகாரி கடைசியில தலைவர் பதவிக்கு மனு போட்ட ஆர்.வி.உதயகுமார் மனுவை தள்ளுபடி பண்ணிட்டாரு. தலைவர் பதவிக்கு டம்மி மனுத்தாக்கல் செய்த நான் நிஜ தலைவர் பதவிக்கு போட்டியிடவேண்டியதாகிப்போச்சி... இது எப்படின்னா கல்யாணத்துக்கு போன நான் திடீர்னு மாப்பிள்ளையாகிட்டேன்...
சரி மாப்பிள்ளை ஆனதும் பொண்ணத்தேடிப்பாத்தா... வெளியில தனியா நின்ன ஆர்.சுந்தர்ராஜன் சிக்கினாரு... அவங்க வீட்டம்மா எனக்கு முழு ஆதரவு குடுத்தாங்க... எப்படியாவது எங்க வீட்டுக்காரரை உங்களோட கூட்டிகிட்டு போயிடுங்கன்னு இப்ப பாருங்க நான் தலைவர் பதவிக்கும், அவர் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுறோம்...
இப்ப கூட என் மனுவை தள்ளுபடி பண்ணனும்னு தேர்தல் அதிகாரியிடம் புகார் குடுத்திருங்காங்க... ஒரு வேளை என் மனுவை தள்ளுபடி பண்ணிட்டா நான் சும்மா இருக்க மாட்டேன்... எதுவரைக்கும் போராட முடியுமோ அதுவுரைக்கும் போராடி நல்ல டீம் கையில இயக்குனர் சங்கத்தை ஒப்படைப்பேன்..." என்றார் விசு.

நழுவிய விக்ரமன்
இது பற்றி இயக்குநர் விக்ரமனை தொடர்பு கொண்டு கேட்ட போது தேர்தல் விதிமுறைகளின் படி பத்திரிக்கைகளிலோ தொலைக்காட்சிகளிலோ எனது கருத்துக்களை பதிவு செய்ய கூடாது என்பதை நானறிவேன். அவர் என்ன பேசினாலும் என்னால் கருத்துக்கூற இயலாது என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











