விஸ்வரூபமெடுக்கிறதா விவேகம் நஷ்டக் கணக்கு?
ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான விவேகம் திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கும், எம்.ஜி அடிப்படையில் திரையிட்ட
தியேட்டர்களும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவேகம் தமிழ்நாட்டில் அனைத்து ஏரியா உரிமைகளும் சுமார் 55 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.
செங்கல்பட்டு ஏரியா அதிகபட்சமாக 11 .75 கோடிக்கும் திருநெல்வேலி ஏரியா குறைந்த விலையாக 3.75 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
செங்கல்பட்டு ஏரியாவில் தியேட்டர்கள் எம்.ஜி அடிப்படையில் படங்கள் திரையிடுவதில்லை என்பதால் முழு ரிஸ்க்கும் விநியோகஸ்தரையே சேர்ந்தது. முதல்
ஐந்து நாட்கள விடுமுறை என்பதாலும், புதிய படங்கள் வராததால் விவேகம் கல்லா கட்டியது. அதன் பின் விவேகத்துக்கு கூட்டமில்லை. நூற்றுக்கும்
குறைவான டிக்கட்டுகள்தான் ஒவ்வொரு காட்சிக்கும் விற்பனை ஆகின. இதே நிலைதான் தமிழகம் முழுவதும்
இருந்தது என்றாலும் கோவை, சென்னை இருநகரங்களிலும் முதல் வாரம் முடியும் வரை கல்லா கட்டியது விவேகம்.
இரண்டு வாரம் முடியப் போகிற நிலையில் விவேகம் படம் வாங்கிய விநியோகஸ்தர்களில் செங்கல்பட்டு ஏரியாவில் 3.50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மதுரை ஏரியாவில் தியேட்டர்களில் 6.75 கோடி வரை எம்.ஜி வசூலிக்கப்பட்டது. விநியோகஸ்தருக்கு எந்த ரிஸ்க்கும் இல்லை. தியேட்டர்களுக்கு 2.50 கோடி
நஷ்டம் உறுதி என்கின்றனர் தியேட்டர்காரர்கள். சேலம் ஏரியா 5.50 கோடி விலை. செங்கல்பட்டு ஏரியா போல் விநியோகஸ்தர் ரிஸ்க் என்பதால் 2.25 கோடி
நஷ்டம் தவிர்க்க முடியாதது. இங்கு தியேட்டர்களுக்கு நஷ்டம் கிடையாது.

திருச்சி ஏரியா விலை 5.50 கோடி. இங்கும் விநியோகஸ்தர் ரிஸ்க் என்பதால் சுமார் 2 கோடி நஷ்டம் என்கின்றனர்.
இதே போன்று விநியோகஸ்தர் அல்லது தியேட்டர் உரிமையாளர்கள் அல்லது இருவருக்குமே நஷ்டம் என்கிற அடிப்படையில் சுமார் 15 கோடி முதல் 20 கோடி
வரை விவேகம் படம் மூலம் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனை தயாரிப்பாளரோ, கதாநாயகன் அஜித் குமாரோ முழுமையாக திருப்பித்
தர வேண்டும் என்கிறார் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர்.
அஜித் குமாரை நம்பித்தான் படம் வாங்குகிறோம். இது தாங்க முடியாத நஷ்டம். இந்த நஷ்டத்தை ஈடுகட்ட அஜித் முன் வர வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார் ஸ்ரீதர்.
நஷ்டத்தை திரும்பப் பெறுவதற்கு தியேட்டர் அதிபர்கள், நியோகஸ்தர்கள் அடங்கிய கூட்டம் திருச்சி அல்லது சென்னையில் விரைவில் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
- ஏகலைவன்


Click it and Unblock the Notifications











