அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்.. தனுஷ் பட விழாவில் நடந்த பாலியல் சீண்டல்.. ஐஸ்வர்யா காட்டம்
சென்னை: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா என்பவருக்கு ரசிகர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். தற்போது அந்த விவகாரம் குறித்து ஐஸ்வர்யா காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.
ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். அவர் தற்போது தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தை இயக்கியிருக்கிறார். அவர் இயக்கிய முதல் இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. இதன் காரணமாக இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதிலும் தனுஷும் அருணும் முதன்முதலில் இணைந்திருப்பதாலும் ரசிகர்கள் இந்த காம்போ செய்திருக்கும் சம்பவத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள்.

பொங்கல் ரேஸில் கேப்டன் மில்லர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அன்றைய தினம் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படமும் வெளியாகிறது. இதனால் இந்தப் பொங்கல் ரேஸில் கடும் போட்டி இருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயனை தனுஷ்தான் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதையும் ரசிகர்கள் பலரும் நினைவுகூர்ந்து இந்தப் போட்டிக்கு சுவாரஸ்யத்தை கூட்டுகின்றனர்.
ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்: இந்த சூழலில் கேப்டன் மில்லர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் தனுஷ் தனது மகன்களுடன் கலந்துகொண்டார். மேலும் படத்தில் பணியாற்றிய சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். தனுஷ் பேசியபோது கண்டிப்பாக இந்தப் படம் சர்வதேச தரத்தில் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல் அருண் மாதேஸ்வரனும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
பாலியல் சீண்டல்: இந்த விழாவின் பெரிய சர்ச்சை என்றால் அது தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுக்கு நடந்த பாலியல் சீண்டல்தான். விழாவுக்கு வந்திருந்த தனுஷ் ரசிகர்களில் ஒருவர் ஐஸ்வர்யாவை தவறான முறையில் தொட்டுவிட்டார். சரியாக அந்த ரசிகரை கண்டுபிடித்த ஐஸ்வர்யா அடி பின்னியெடுத்துவிட்டார். மேலும் தனது காலில் விழுந்து அந்த ரசிகரை மன்னிப்பும் கேட்க வைத்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. மேலும் போல்டாக நடந்துகொண்ட ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் தங்களது பாராட்டையும் தெரிவித்தனர்.
ஐஸ்வர்யா பதிவு: இந்நிலையில் அந்த விவகாரம் குறித்து ஐஸ்வர்யா தற்போது காட்டமாக பதிவிட்டிருக்கிறார். அவர் போட்டிருக்கும் பதிவில், "கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா கூட்டத்தில் என்னிடம் ஒருவன் தவறாக நடந்துகொண்டான். நான் அவை உடனே பார்த்துவிட்டேன். விடாமல் தொடர்ந்து அடித்தேன். ஆனால் அவன் ஓடிவிட்டான். இருந்தாலும் நான் விடவில்லை. துரத்தி சென்று இறுக்கி பிடித்துக்கொண்டேன்.
எவ்வளவு தைரியம்: ஒரு பெண்ணுடைய அங்கத்தை தொடுவதற்கு அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும். அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அந்தக் கூட்டத்தில் என்னை சுற்றி நல்ல மனிதர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அதேபோல் நல்ல குடும்பத்திலிருந்து வந்த மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு தெரியும். ஆனால் நம்மை சுற்றி இதுபோன்ற ஒரு சில அரக்கர்களும் இருக்கிறார்கள் என்பதை யோசிக்கும்போது பயமாகவும் இருக்கிறது" என்றார்.
கூல் சுரேஷ்: முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் தயாரிப்பில் உருவான சரக்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் ஐஸ்வர்யாதான் தொகுத்து வழங்கினார். அப்போது நடிகர் கூல் சுரேஷ் திடீரென ஐஸ்வர்யாவின் கழுத்தில் மேடையில் வைத்தே மாலையை போட்டுவிட்டார். இது அவருக்கு ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது. இதனையடுத்து கூல் சுரேஷ் மேடையிலும், வீடியோ வெளியிட்டும் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











