விஜய் தொகுதியில் எவ்வளவு வாக்குப்பதிவு.. தமிழ்நாடு முழுவதும் வாக்கு பதிவு அதிகரிக்க விஜய் காரணமா?
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெற்று முடிந்தது. மொத்தம் 84.69 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த இரண்டு தொகுதிகளிலும் எவ்வளவு வாக்குப்பதிவு ஆகி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சி முதன் முதலாக தேர்தலை எதிர் கொள்கிறது. விஜய் தனது ரசிகர்களையும் திமுக மற்றும் அதிமுக அதிருப்தி வாக்குகளையும் பிரதானமாக வைத்துத்தான் தேர்தல் அரசியலில் களம் கண்டுள்ளார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில் அவர் தனது முதல் தேர்தலிலேயே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது, விஜய் தோற்றுவிடுவாரோ என்ற எண்ணத்தின் வெளிப்பாடு தான் என்றும் சிலர் விமர்சித்தனர். இப்படி இருக்கையில் அவர் போட்டியிட்டுள்ள தொகுதிகளில் எவ்வளவு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என்பது பலரது ஆவலான கேள்வியாக இருந்தது.
அந்தவகையில், பெரம்பூர் தொகுதியில், 89.71 சதவீதமும், திருச்சி கிழக்கில் 81.77 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 62.96% வாக்குகள் பதிவானது. அதாவது மொத்த வாக்குகளான 3,15,884 வாக்குகளில் 1,98,872 வாக்குகள் பதிவானது. தற்போது இந்த தொகுதியில் 3,10,925 வாக்காளர்கள் உள்ளனர். இதில் சுமார் 2,78,931 வாக்களர்கள் வாக்கு செலுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோல் திருச்சி கிழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு 69.32% வாக்குப்பதிவு நடைபெற்றது. அதாவது, 2,47,148 வாக்காளர்களில் 1,71,321 வாக்குகள் பதிவானது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 2,55,051 வாக்காளர்களை இந்த தொகுதி கொண்டுள்ளது. மேலும் தற்போது 81.77 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது. அதாவது, சுமார் 2,08,559 பேர் வாக்களித்திருக்க வாய்ப்புகள் உள்ளது.
தமிழ்நாடு முழுவதுமே வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. இதில் முதலமைச்சர் வேட்பாளர்களில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியான எடப்பாடி தொகுதியியில் 92.03 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. வாக்குப்பதிவு பரவலாக அதிகரிக்க காரணம் 2024 - 2025ஆம் ஆண்டு காலத்தில் நடைபெற்ற SIR பணிகள் தான் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications