“அதெப்படி நான் போட்டது கள்ள ஓட்டாகும்..?” லாஜிக்கோடு கேட்கும் சிவகார்த்திக்கேயன்!
மக்களவை தேர்தலில் தனது ஓட்டையே பதிவு செய்ததாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
சென்னை: மக்களவை தேர்தலில் தனது ஓட்டையே பதிவு செய்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் முதலில் திருப்பி அனுப்பப்பட்ட சிவகார்த்திகேயன், சில மணி நேரம் கழித்து மீண்டும் வந்து வாக்களித்தார். அதிகாரிகள் எப்படி இதனை அனுமதித்தனர் என கேள்வி எழுந்தது.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.

எந்த தவறும் நடக்கவில்லை
இந்நிலையில் சென்னையில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மக்களை தேர்தலில் ஓட்டுப்போட்டதில் எந்த தவறும் நடக்கவில்லை என்றார்.

சர்ச்சையாக்கிவிட்டனர்
இதுகுறித்து அவர் கூறியதாவது, " மக்களவை தேர்தலில் நான் வாக்களித்ததை சர்ச்சையாக்கி உள்ளனர். எனது ஓட்டைத்தான் நான் பதிவு செய்தேன். அதற்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. நான் இந்த நாட்டின் குடிமகன். எனவே எனக்கு வாக்களிக்க உரிமை உள்ளது. தேர்தல் கமிஷனே அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

கள்ள ஓட்டு இல்லை
ஒரு மாதத்திற்கு முன்பு எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தது. இப்போது பட்டியலில் இல்லை என்றால் அது என்னுடைய தவறு இல்லை. நான் வேறு ஒருவர் பெயரில் ஓட்டு போடவில்லை. எனது வாக்கைத்தான் பதிவு செய்தேன். இதை கள்ள ஓட்டு என்று சொல்வது தவறு.

என்னை அழைக்கவில்லை
எல்லோரும் ஓட்டு போட்ட மாதிரி தான் எனது வாக்கை பதிவு செய்தேன். பட்டியலில் பெயர் இல்லாதது எனது தவறு அல்ல. வாக்களிக்க அனுமதித்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தான் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார். என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றோ, விசாரணைக்கு அழைக்கப்படுவேன் என்றோ அவர் சொல்லவில்லை", இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.


Click it and Unblock the Notifications











