மனிதனுக்கு தேவை தண்ணீர்... இந்தியாவிற்குத் தேவை பிரதமர் மோடி: பவன் கல்யாண் பிரச்சாரம்
நகரி: ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்த காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்றும், அதேசமயம் மோடி பிரதமராக வருவது இந்தியாவிற்கு நல்லது என்றும் தன் தேர்தல் பிரச்சாரத்தில் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாண் கடந்த மாதம் 'ஜனசேனை' என்ற புதிய கட்சியை தொடங்கினார். அதனையடுத்து ஜனசேனை கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டம் விசாகபட்டினத்தில் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண் தங்கள் கட்சி வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

போட்டியில்லை...
''வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடவில்லை. தூய்மையான, சிறந்த இளைஞர்கள் எங்கள் கட்சியில் சேர்ந்த பிறகு தேர்தலில் போட்டியிடுவோம்.

தவறு நடந்தால் தட்டிக் கேட்பேன்...
அடுத்த 5 ஆண்டுகள் ஆந்திராவில் ஆட்சி எப்படி நடக்கிறது என்பதை கண்காணிப்பேன். ஏதாவது தவறு நடந்தால் தட்டிக் கேட்பேன்.

உங்கள் ஓட்டு...
சீமாந்திரா பகுதிக்கு நல்ல தலை நகரை யார் உருவாக்குவார்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள்.

மோடிக்கு ஆதரவு....
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை ஆதரிக்கிறோம். மனிதனுக்கு தண்ணீர் எந்த அளவுக்கு அவசியமோ அந்த அளவுக்கு முக்கியம் நரேந்திர மோடி பிரதமராக வருவது.

ஆந்திராவை பிரித்த காங்கிரஸ்....
காங்கிரஸ் கட்சி 150 ஆண்டு பாரம்பரியமிக்கது என்று கூறுகிறார்கள். நேரு, காந்தி வழியில் வந்த சோனியா காந்தி ஆந்திராவை இரண்டாக பிரித்து ஒன்றாக இருந்த மக்களை இரண்டாக்கி விட்டார்.

காங்கிரஸை ஒழிக்க வேண்டும்....
காந்தி, நேரு உயிரோடு இருந்திருந்தால் பிரிவினை ஏற்பட்டு இருக்காது. ஆனால் சோனியா மக்களை பிரித்து விட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும்.

மதவாத அரசியல் இல்லை...
எனக்கு மதம், கடவுள் மீது நம்பிக்கை உண்டு. ஆனால் மதவாத அரசியல் செய்ய மாட்டேன். ஒரு கன்னத்தில் அடித்தால் 2 கன்னத்திலும் திருப்பி அடிப்பதுதான் எங்கள் கொள்கை.

சிரஞ்சீவியை நேசிக்கிறேன்....
நான் சிரஞ்சீவிக்கு எதிராக கட்சி தொடங்கவில்லை. சிரஞ்சீவி மீது நான் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன். ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் அவருக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டியதாகிவிட்டது" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











