மூக்கில் குத்துவீர்களா?..நாகரீகம் உண்டா?..மன்னிப்பு கேளுங்கள் மிஷ்கின்..வாட்டர் மெலன் ஸ்டார் அலப்பறை
சென்னை: பாட்டல் ராதா படத்தின் விழாவில் மிஷ்கின் பேசியதுதான் கடந்த சில நாட்களாக ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. குடிகாரர்கள் பற்றியும், புதிதாக நடிப்பவர்கள் பற்றியும் அவர் பேசியது கண்டனத்தை பெற்றிருக்கிறது. அவருக்கு எதிராக இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்டோரும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் வாட்டர் மெலன் ஸ்டார் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் திவாகர் மிஷ்கினுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் மிஷ்கின் ஒரு படத்தின் விழாவில் கலந்துகொண்டாலே கண்டிப்பாக அன்று சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த அளவுக்கு அவர் பேசுவார். அப்படித்தான் சமீபத்தில் நடந்த பாட்டல் ராதா படத்தின் விழாவிலும் பேசினார். அந்த விழாவில் பேசிய அவர், "நான் பக்கா குடிகாரன். நிறைய குடித்தவனும், குடிப்பவனும், குடிக்கப்போகிறவனும் நானேதான். இளையராஜாதான் பலரையும் குடிகாரராக்கினார். இப்போது எல்லோருமே நடிக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் எல்லாம் யார் யாரோ நடிக்கிறார்கள். அவர்கள் செய்வதற்கு பெயர் நடிப்பு கிடையாது. ஆப்பு. அவர்களை குத்த வேண்டும் போல் இருக்கிறது" என்று பேசினார்.

திவாகர் பதிலடி: மேலும் ஆபாசமாகவும் பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகிறார்கள். இந்தச் சூழலில் கஜினி படத்தில் வரும் ஒரு சீனை நடித்து தன்னைத்தானே வாட்டர் மெலன் ஸ்டார் என்று கூறிக்கொள்ளும் திவாகர் மிஷ்கினுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நிறைய சமூக சீர்திருத்த படங்களை மிஷ்கின் எடுக்க வேண்டும். நீங்கள்தான் மிஷ்கின் எங்களுக்கு அட்வைஸ் செய்ய வேண்டும். நாங்கள் உங்களுக்கு அட்வைஸ் செய்யவேகூடாது.
முன்னோடியாக திகழுங்கள்: மிஷ்கினுக்கு 50 வயதுக்கும் மேல் ஆகிவிட்டது. அவர்தான் எல்லோருக்கும் முன்னோடியாக திகழ வேண்டும். அதைவிடுத்து மற்றவர்கள் அவருக்கு அட்வைஸ் செய்யும் அளவுக்கு நடந்து கொள்ளக்கூடாது. அந்தப் படத்தின் விழாவில் அப்படி அநாகரீகமாக பேசியிருக்கக்கூடாது. அவர் ஒரு சிறுவனை குறிப்பிட்டு நடித்து காண்பித்தார். அதை அங்கிருந்த கூட்டமும் ரசித்தது. அவர் பேசியதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்த சிலர் என்னுடைய புகைப்படத்தையும் அதில் இணைத்தார்கள். மிஷ்கின் என்னை பற்றி அந்த விழாவில் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.
அநாகரீகம்: அவர் அநாகரீகமாக பேசியதற்காக மக்களுக்கு முன்பு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு இளைய தலைமுறையை இப்படி பேசியிருக்கக்கூடாது. நடிக்க தெரியாதவர்களை நடிக்க வைப்பவர்கள்தான் இயக்குநர்கள். அப்படி நடிக்க தெரியாதவர்களின் மூக்கில் குத்துவேன் என்று கூறியிருக்கிறார். இதெல்லாம் ஒரு பேச்சா. நாகரீகம் என்று ஒன்று உங்களிடம் உண்டா?இப்படி அவர் எப்போதும் பேசக்கூடாது.
உலகமே இருக்கு: மிஷ்கினின் குடும்ப உறுப்பினர்களை யாராவது இப்படி திட்டியிருந்தால்கூட மக்களுக்கு இது பெரிதாக தெரிந்திருக்காது. ஆனால் மிஷ்கின் ஒரு இயக்குநர் என்பதால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் விலைக்கு வாங்கிவிட்டதாக நினைக்கக்கூடாது. எங்கள் பின், என் பின்னால் இந்தியா ஏன் உலகமே இருக்கிறது. அதை மிஷ்கின் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்றார். திவாகரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. முன்னதாக வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் 3 படத்தில் தனுஷ் தற்கொலை செய்துகொள்ளும் காட்சியையும் நடித்து வீடியோவாக வெளியிட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











