விஜய் எனக்கு மாமாதான்.. ஆனாலும்.. உறவுக்கார பெண் ஓபனாக சொல்லிருக்காங்க பாருங்க
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தவெக 108 இடங்களை பிடித்திருக்கிறது. காங்கிரஸ் ஆதரவோடு அதன் பலம் இப்போது 113ஆக இருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களை காட்டினால்தான் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று ஆளுநர் மாளிகையில் சொல்லப்பட்டுவிட்டது. ஆனால் இது அரசியல் சட்டத்துக்கே எதிரானது என்று பலர் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் விஜய்யின் உறவுக்கார பெண் ஒருவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ்நாடு அரசியல் களம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இப்போது பரபரத்து கிடக்கிறது. அவர் இறந்ததும் எப்படி சசிகலாவை பதவி ஏற்க விடாமல் ஆளுநர் காலம் தாழ்த்தினாரோ அதேபோன்ற காட்சிகள் தவெகவுக்கும் அரங்கேறிவருகின்றன. பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற முடியாமல் திணறிவருகிறார் விஜய். காங்கிரஸ் ஆதரவு கொடுத்தாலும் அவர் எதிர்பார்த்த விசிக, கம்யூனிஸ்ட்டுகள் எல்லாம் ஆதரவு கொடுக்க தயங்கிவருகிறார்கள்.

பாஜகவின் விளையாட்டு: அதிமுக எம்.எல்.ஏக்கள், தவெக எம்.எல்.ஏக்கள் எல்லாம் வெவ்வேறு சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னொரு கூவத்தூர் விளையாட்டு தொடங்கிவிடுமோ என்ற அச்சமும் மக்களிடம் இருக்கிறது. குறிப்பாக தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததால்; பாஜகவின் கோபம் உச்சத்துக்கு சென்றுவிட்டது என்றும்; அதனால்தான் ஆளுநரை வைத்து அரசியல் தகிடுதத்தங்களை செய்துவருவதாக குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.
திமுகவின் நிலைப்பாடு: திமுகவை பொறுத்தவரை இந்த விஷயத்தில் ரொம்பவே தெளிவாக தனது நிலைப்பாட்டை உணர்த்திவிட்டது. அந்தக் கட்சி எதிர்க்கட்சியாக மட்டுமே செயல்படும். மேலும், தவெக ஆட்சியமைவதற்கு திமுகவின் இடையூறு இருக்காது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓபனாகவே சொல்லிவிட்டார். ஆனால் தவெகவினரோ வழக்கம்போல் இந்த விஷயத்திலும் திமுகவினரை குறை சொல்ல தொடங்கிவிட்டார்கள். இதனால் திமுக Vs தவெக என்ற மோதல் சோஷியல் மீடியாவில் மேற்கொண்டு உச்சத்துக்கு சென்றிருக்கிறது.
உறவுக்கார பெண் பேட்டி: இந்நிலையில் விஜய்யின் மாமா சுந்தரின் மகள் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "விஜய் எனக்கு மாமாதான். ஆனால் எல்லோருமே அவரை அண்ணா அண்ணா என்று சொல்லி பழகிவிட்டோம். எனவே இப்போதும் அவரை அண்ணா என்றுதான் கூப்பிடுகிறோம். அவரை எங்களுக்கு அண்ணனாகத்தான் பார்க்கிறோம். நானும், ஷோபா அத்தையும் ஒரே மாதிரியாக இருப்பதாக நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். அது எனக்கு பெரிய சந்தோஷம்தான்.
அவரது எல்லா படங்களுக்கும் நாங்கள் ப்ரிவ்யூ ஷோ போய்விடுவோம். அவர் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறுவதை பார்க்க அழகாக இருந்தது. அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற ஆவல் எங்களுக்கு எழும். பலர் எங்களிடம் வந்து, உங்கள் அண்ணன் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications
