ஒரு பக்கம் உடையுதாம், சாயுதாம் .. காஷ்மீரில் நில நடுக்கம் .. லியோ படக்குழு போட்ட ட்வீட்
காஷ்மீர்: வட மாநிலங்களில் நில நடுக்கம் ஏற்பட்ட சூழலில் காஷ்மீரில் இருக்கும் லியோ படக்குழு எப்படி இருக்கிறது என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகம் எழுந்திருக்கிறது.
டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. 45 நொடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக வைத்து ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 6.8ஆக பதிவாகியுள்ளது.

காஷ்மீரில் முகாமிட்டிருக்கும் லியோ படக்குழு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படம் லியோ. இதில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். லியோ படக்குழு படப்பிடிப்புக்காக காஷ்மீரில் சில மாதங்களாக முகாமிட்டிருக்கிறது. மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோருக்கான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. படப்பிடிப்பை முடித்த மிஷ்கின் விஜய்யையும், லோகேஷ் கனகராஜையும் ஏகத்துக்கும் புகழ்ந்தார்.

காஷ்மீரில் இருக்கும் விஜய், த்ரிஷா
மற்றவர்களுக்கான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டாலும் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோருக்கான போர்ஷன் இன்னும் முடிவடையாததால் அவர்கள் இன்னமும் அங்கேதான் முகாமிட்டிருக்கிறார்கள். லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான மும்முர பணிகளில் லோகேஷ் கனகராஜ் இறங்கியிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

காஷ்மீரில் நிலநடுக்கம்
இந்நிலையில் வடமாநிலங்களில் நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. காஷ்மீரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இச்சூழலில் காஷ்மீரில் விஜய், லோகேஷ் கனகராஜ், த்ரிஷா உள்ளிட்டோர் இருப்பதால் அவர்களின் நிலை என்ன என்பது குறித்து ரசிகர்கள் கவலையடைந்து அதுகுறித்து நள்ளிரவு முதல் சமூக வலைதளங்களிலும் கேள்வி எழுப்பிவந்தனர்.

தயாரிப்பு நிறுவனம் செய்திருக்கும் ட்வீட்
இதனையடுத்து படத்தை தயாரிக்கும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், சந்திரமுகி படத்தில் அரண்மனைக்குள் வடிவேலு செல்லும்போது பொருட்கள் உடையும் காட்சியை பகிர்ந்து, நாங்கள் பத்திரமாக இருக்கிறோம் நண்பா என குறிப்பிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அதேபோல் படத்திற்கு வசனம் எழுதும் இயக்குநரான வசனகர்த்தாவான ரத்னகுமாரும் , 'ப்ளடி நிலநடுக்கம்' என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த ட்வீட்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.

சென்னையில் லியோ படத்தின் ஷூட்டிங்
காஷ்மீரில் இந்த வாரத்துக்குள் ஷூட்டிங்கை முடிக்கும் லியோ படக்குழு அடுத்ததாக சென்னை திரும்பவிருக்கிறது. குட்டி ரெஸ்ட்டை எடுத்துவிட்டு சென்னையில் மீண்டும் ஷூட்டிங்கை தொடங்கும் படக்குழு க்ளைமேக்ஸை ஷூட் செய்வதற்காக ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்லவிருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு ஒன்றும் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











